![A stray dog that bit blindly; The tragedy of a 3-year-old boy](http://image.nakkheeran.in/cdn/farfuture/-2bvkGQEpceoBBdMoEql-6-ehZMfGOl05PQn8gDgMvA/1715779096/sites/default/files/inline-images/A71117.jpg)
சென்னையில் வளர்ப்பு நாய்கள் சிறுமி ஒருவரைக் கடித்துக் குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் இதேபோன்று நாய்க் கடிக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் சீர்காழியில் மூன்று வயது சிறுவனை தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சீர்காழி அருகே நெப்பத்தூர் தீவு பகுதியில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி ஞானசேகரன். இன்று வழக்கம் போல ஞானசேகரன் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்றுள்ளார். உடன் அவருடைய மூன்று வயது மகனையும் அழைத்து சென்றுள்ளார். சிறுவனை விளையாட விட்டுவிட்டு ஞானசேகரன் பணியாற்றிக் கொண்டிருந்தார். சிறுவன் அந்தப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அங்கு சுற்றிக் கொண்டிருந்த தெரு நாய் ஒன்று மூன்று வயது சிறுவனை கடித்து குதறியது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனே ஓடி வந்து தெரு நாயை அடித்து விரட்டிய ஞானசேகரன் குழந்தையை முதலுதவி சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளார். தந்தை திடீரென இதனைப் பார்க்க நேர்ந்து நாயை விரட்டியதால் பெரும் ஆபத்தில் இருந்து சிறுவன் தப்பியுள்ளான். இருப்பினும் கை, முதுகு மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் நாய்க் கடித்துள்ளது. தற்பொழுது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தொடரும் இந்த நாய்க் கடி சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.