![storm warning; Advice to stop construction work](http://image.nakkheeran.in/cdn/farfuture/JILHkmRDMVvneE0X4uqmRGRnHIEC1tOeB69EoGgp9D0/1701516454/sites/default/files/inline-images/cyclone-buliding.jpg)
வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தற்போது சென்னையிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் 70 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் எனவும், புயல் காரணமாக 3 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் அதற்கு மிக்ஜம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மிக்ஜம் புயல் டிசம்பர் 5 ஆம் தேதி முற்பகலில் நெல்லூருக்கும் - மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையைக் கடக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த புயல் காரணமாக சென்னையில் நடைபெறும் கட்டுமான பணிகளை தற்காலிமாக நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி கூறியதாவது, ‘நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதனால், சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் நிறுத்தி வைக்க வேண்டும். கட்டுமான பணிகளை நிறுத்துவதுடன் அதற்கான பொருட்களை தரை தளத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். அதில், கதவு, ஜன்னல், இரும்புத் தகடுகள், மரப்பலகைகள், டவர் கிரேன், டிராலிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களை தரை தளத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.