Skip to main content

பெண் யானை ஜெயமால்யதா மீதான தாக்குதல் தொடர்வது ஏன்?- பழைய வீடியோ என ஆண்டாள் கோயில் நிர்வாகம் விளக்கம்!  

Published on 12/06/2022 | Edited on 12/06/2022

 

srivilliputhur temple elephant incident

 

‘யானைகள் புத்திசாலியான விலங்கு. அவற்றின் உள்ளுணர்வு மனிதர்களுக்குக் கிடையாது. யானைகள் உள்ளிட்ட விலங்குகள் துன்புறுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது. கோயில் யானைகளை முறையாக நடத்தவேண்டும்.’ 

 

கடந்த ஆண்டு விசாரிக்கப்பட்ட பொதுநல வழக்கொன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறையும் வனத்துறையும் இணைந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டபோது, இவ்வாறு அறிவுறுத்தியிருந்தனர்.  

 

தற்போது, கோயில் யானை ஒன்று பாகனால் தாக்கப்படும் காட்சி வலைத்தளங்களில் பரவிவரும் நிலையில், அதுகுறித்து விசாரித்தோம். “துன்புறுத்தப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பெண் யானை ஜெயமால்யதா..”என்றனர். 


என்ன நடந்தது? 

கடந்த ஆண்டும் இதே ஜெயமால்யதா, புத்துணர்வு முகாமில் வைத்து யானைப் பாகனால் தாக்கப்படும் வீடியோ வலைத்தளங்களில் பரவியது. அதனால், பாகன் ராஜா சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார். தற்போதும் ஜெயமால்யதா பாகனால் தாக்கப்பட்டு பிளிறும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

இதுகுறித்த நமது கேள்விக்கு விளக்கமளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் முத்துராஜ் ”இது பழைய வீடியோ. இப்ப நடந்த மாதிரி ஏனோ பொய்யான தகவலைப் பரப்புறாங்க. 2021 ஜூன்-ல அந்தப் பாகனை வேலையை விட்டு அனுப்பிட்டாங்க. வீடியோவுல இருக்கிற பாகன் இப்ப வேலையிலேயே இல்லை. கோயில் கணக்காளர் சுப்பையா, காவலராகப் பணியாற்றும் கர்ணனைக் காலால் எட்டி உதைத்து வைரலானதும்கூட பழைய வீடியோதான். ஆண்டாள் கோவிலை மையப்படுத்தி, பழைய சம்பவங்களைப் புதிதாக நடப்பதுபோல் ஏன் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.”என்று வருத்தப்பட்டார்.

 

‘பழசு- புதுசு’என்ற ஆண்டாள் கோவில் தரப்பின் விளக்கம் ஒருபுறமும், விலங்குகள் கொடுமைத் தடுப்புச் சட்டம் மறுபுறமும் இருந்தாலும், கோயில் யானை பராமரிப்பில் இன்னும் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டும் என்பதே விலங்கின ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திரௌபதி அம்மன் கோவில் இன்று திறப்பு; போலீசார் குவிப்பு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Draupadi Amman temple opens today; Police build up

விழுப்புரம் திரௌபதி அம்மன் கோவில் இன்று திறக்கப்படுகிறது.

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த திரௌபதி அம்மன் தீமிதி திருவிழாவில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கோவிலுக்கு சீல் வைத்தது. கோவிலில் இதுவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. எட்டு கட்டமாக சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தது.

இந்நிலையில் 22 ஆம் தேதியான இன்று கோவிலைத் திறந்து பூஜை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாத நிலையில், ஒரு கால பூஜை மற்றும் பூசாரியால் செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை முதலே கோவிலை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்ற நிலையில், தற்போது கட்டிங் மெஷின் மூலம் கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கோவிலைத் திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதுகாப்புப் பணிக்காக அதிகப்படியான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

யானைகள் தொடர் அட்டகாசம்; வனத்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
 villagers staged a struggle against the forest department as the elephants continued to roar
கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளப்பாடி, கே.வலசை, கணவாய் மோட்டூர், அனுப்பு, டிபி பாளையம், உள்ளிட்ட பகுதிகள் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டி உள்ளது. இங்கு தொடர்ந்து யானைகள்  விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

மேலும் பயிர்களை தொடர்ந்து யானைகள் சேதப்படுத்தி வருவதாகவும் அதை கட்டுக்குள் கொண்டு வர வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்து வரும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரியும் கிராம மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடியாத்தம் - பரதராமி சாலையில் கணவாய் மோட்டூர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் குடியாத்தம் பரதராமி சாலையில் சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரதராமி காவல்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினர், மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் உரிய நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர்  உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.