![fishrman](http://image.nakkheeran.in/cdn/farfuture/6tNpCj3ZgS26DHWnst2mYwOU8vjBGyziBEAK-IvL_PY/1533347634/sites/default/files/inline-images/SnapShot%2811%29.jpg)
இந்திய எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி 1லட்சம் மதிப்பிலான வலை உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றுள்ளனர், கடல் கொள்ளையர்களால் தாக்குதலில் மீனவர்கள் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம், நாகூர் சம்பாத்தோட்டம் மீனவர் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரது பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி, ரமேஷ், லட்சுமணன், செல்வமணி, இடும்பன் ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
இரவு 10 மணி அளவில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில், அவ்வழியே வந்த இலங்கை கடற்கொள்ளை கும்பல் அவர்களை மறித்துள்ளது. கொள்ளை கும்பலிடம் இருந்து தப்பி செல்ல முயற்சி செய்த தமிழக மீனவர்கள் மீது, கடற்கொள்ளையர்கள் இரும்புகம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
![fishrman](http://image.nakkheeran.in/cdn/farfuture/dvMaa1SVm5vcCMFjGoslxiRG34kCiuOMZJDqEVbOuuU/1533347634/sites/default/files/inline-images/SnapShot%289%29.jpg)
மேலும், கத்தியை காட்டி மிரட்டி படகில் இருந்த வலை, ஜிபிஎஸ் கருவி, கயிறு உள்ளிட்ட 1லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்றுள்ளனர். இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த நாகூர் சம்பாத்தோட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த லக்ஷ்மணன் நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் நாகூர் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.