Skip to main content

ஹெலிகாப்டரில் சேசிங்... பிடிப்பட்ட இலங்கை மீனவர்கள்... கைப்பற்றப்பட்ட தங்கம்....!!!

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தி வருவதையறிந்த இந்தியகடற்படை வீரர்கள், கடத்தல் படகினை ஹெலிகாப்டரில் சேசிங் செய்து இலங்கை மீனவர்களை பிடித்து, அவர்களிடமிருந்த 35 தங்கக் கட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் நடைப்பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகு தமிழ்நாட்டிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை இலங்கைக்கும், அதற்கு ஈடாக இலங்கையினர் தங்கக்கட்டிகளையும் கடத்தி வருவது ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மாறாத வழமைகளில் ஒன்று. இருப்பினும், ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காமல் தங்களுடைய டீமை மட்டும் வைத்து சுங்க இலாகா, கடற்படையினர், தமிழக கடலோரகாவல் படையினர் மற்றும் மத்திய, மாநில உளவுப்பிரிவவு போலீசாரும் களத்தில் இறங்கி கடத்தலை தடுக்கப் போராடி வருகின்றனர்.

 

 Sri Lankan fishermen caught in helicopter ...

 

இது இப்படியிருக்க, நேற்று காலை உச்சிப்புளி ஐஎன்எஸ் விமானப்படை முகாமிலிருந்து கடற்படை வீரர்களை தாங்கிய ஹெலிகாப்டர் ஒன்று மன்னார்வளைகுடா பகுதியில் ரோந்து சென்ற பொழுது, தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்கள் பிளாஸ்டிக் படகின் இந்திய பகுதிக்குள் வருவதை அறிந்து அவர்களை தடுத்தும் நிறுத்தும் நோக்கில் முதலில் அறிவிப்பு செய்துள்ளனர். படகும் நிற்காமல் செல்ல, விடாமல் அதனை விரட்டி சேசிங் செய்து தனுஷ்கோடி அருகில் அரிச்சல்முனை கடல் பகுதியில் வைத்து பிடித்து தமிழக கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் ஹெலிகாப்டரில் இருந்த கடற்படை வீரர்கள்.

 

 Sri Lankan fishermen caught in helicopter ...

 

விசாரணையில், "தாங்கள் மன்னார் பகுதியில் இருந்து மீன் பிடிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு வந்ததாகவும், காற்று காரணமாக இந்திய கடல் பகுதிக்கு தவறுதலாக வந்துவிட்டதாகவும்" தெரிவித்தனர். எனினும், சந்தேகமடைந்த போலீசாரின் தொடர் விசாரணையில், "தங்கச்சிமடம் பகுதியில் உள்ள சிலரிடம் கொடுப்பதற்காக தங்கம் கடத்தி கொண்டு வந்ததாகவும், அது படகின் பின்பகுதியில் ஒளித்து வைத்திருப்பதாகவும் கூறி இடத்தினையும் காண்பித்தனர். படகின் பின்புறத்தில் உடைத்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிராம் அளவு கொண்ட 35 தங்க கட்டிகள் இருப்பதையறிந்து அதனைக் கைப்பற்றி சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேவேளையில், கடத்தல் தங்கம் பெற்றுக்கொள்ள தங்கச்சி மடம் பகுதியிலுள்ளவர்கள் யார்..? என்ற விசாரணையை துவக்கியுள்ளது உள்ளூர் போலீஸ் மற்றும் கியூ பிரிவு போலீஸ். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது” - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Sri Lankan Minister says Sri Lanka's marine resources are being destroyed by Indian fishermen

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. தற்போது கையிலெடுத்து காங்கிரசையும், தி.மு.க.வையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் திமுக, ‘10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?’ என பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. 

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை அமைச்சர் டக்ளஸ் கூறுகையில், “இந்திய மீனவர்கள் படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மீன்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. 

இந்தியாவில் தேர்தல் காலங்களில் கச்சத்தீவு பற்றிய கோரிக்கைகள் மற்றும் எதிர் உரிமைகோரல்களின் சத்தம் கேட்பது அசாதாரணமானது அல்ல. இலங்கை மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாது என்பதையும், அந்த வளமான பகுதியில் இலங்கை எந்த உரிமையையும் கோரக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியா செயல்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது என்பது சாத்தியமற்றது. எனவே, கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல்வளம் முற்றிலுமாக சூறையாடப்படும்” என்று கூறினார்.