Skip to main content

அணிலால் மின்தடை... அமைச்சரின் பதிலுக்கு சமூகவலைதளத்தில் குவியும் எதிர்ப்பும் ஆதரவும் ! 

Published on 23/06/2021 | Edited on 23/06/2021

 

Squirrel blockade ... Support and opposition on social media for the minister's response!

 

அணில்களால் மின் தடை ஏற்படுகிறது என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது  கடும் விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளான நிலையில், தற்போது அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

“தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஊரடங்கு முடியும்வரை மின் தடை இருக்காது. இதனால் மின் பராமரிப்பு பணிகள் நிறுத்திவைக்கப்படுகின்றன” என அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், மீண்டும் மின் பராமரிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அண்மையில் காற்றாலை மின்சார உற்பத்தி இருந்தும் ஏன் மின்தடை ஏற்படுகிறது என முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி கேள்வி எழுப்பியிருந்தார்.

 

Squirrel blockade ... Support and opposition on social media for the minister's response!

 

அதற்குப் பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த ஆட்சியில் கடந்த ஒன்பது மாதங்களாக தமிழ்நாட்டில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறாமல் இருந்துள்ளன. இதனை முதலில் அமைச்சர் ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில் அண்மையில் மின்தடைகள் குறித்து புகார்கள் குவிந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அணில்கள் மின்கம்பியில் ஓடுவதால் மின்தடை ஏற்படுகிறது என கூறியிருந்தார். ''சில இடங்களில் செடிகள் வளர்ந்து  லைனில் படும்போது அதில் அணில் ஓடுகிறது. அப்படி ஓடும்போது அந்த இரண்டும் லைனும் ஒன்றாகி மின்தடை ஏற்படுகிறது'' எனக் கூறியிருந்தார்.

 

Squirrel blockade ... Support and opposition on social media for the minister's response

 

அமைச்சரின் இந்த பதிலுக்கு பலர் எதிர்வினையாற்றிவருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுடன் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒப்பிட்டு சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டுவருகின்றன. அணில் படங்களை வைத்து கேலியாக  செந்தில் பாலாஜியின் கருத்துக்கு எதிராக மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அதே சமயம் செந்தில்பாலாஜிக்கு ஆதரவாகவும் சிலர் மின் கம்பிகளுக்கு அணிலால் ஏற்படும் பாதிப்பு குறித்து செய்திகள், புகைப்படங்கள், கட்டுரைகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

 

Squirrel blockade ... Support and opposition on social media for the minister's response

 

இந்நிலையில், விமர்சனத்தைப் பெற்ற இந்தக் கருத்துக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், ''கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. மரக்கிளைகள் மின்கம்பிகளில் உரசுகின்றன. அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதால்கூட சில இடங்களில் மின்தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாக சொன்னேன்'' என மின்கம்பியில் அணில் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.