Skip to main content

கடலூர் மாவட்டத்திற்கு குடிமராமத்து சிறப்பு நிதி விரைவில் ஒதுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் தகவல்

Published on 28/05/2020 | Edited on 28/05/2020
d



குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டத்தில் பணிகள் துவக்கப்பட்டு ஆங்காங்கே பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் குடிமராமத்து பணி சிறப்பு அலுவலர் விஜயராஜ் ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  இதனை தொடர்ந்து பணிகள் நடைபெறும் பகுதியான சிதம்பரம் அருகே துணிசிரமேடு மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மற்றும் சிறப்பு அதிகாரி விஜயராஜ்  உள்ளிட்ட பொதுப்பணிதுறை, வருவாய் துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கூறுகையில், "தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் ரூ9.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 116 பாசன வாய்க்கால்கள் 430 கிலோமீட்டர் தூரம் தூர்வாரப்படும்.  இந்தாண்டு உரிய காலத்தில் மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். எனவே குடிமராமத்து பணிகள் சுணக்கம் இல்லாமல் தரமாக உத்தரவாதத்துடன் செய்யப்பட்டுள்ளதா என்பதை அலுவலர் விஜயராஜ் ஆய்வு செய்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதன்படி இந்த குடிமராமத்து பணிகளை அந்தந்த பகுதியில் உள்ள பாசன வாய்க்கால் விவசாயிகள் குழுக்கள்  செய்கின்றது. இதனால் இந்த பணிகளை தரமாக செய்யமுடிகிறது. இதில் அரசு எந்த பணிகளையும் செய்வதில்லை. தொழில் நுட்ப சம்பந்தமான அறிவுரைகளை மட்டுமே வழங்கி வருகின்றது. பணிகள் அனைத்தும் துவக்க நிலையில் உள்ளது.

 

 


கடலூர் மாவட்டத்தில் கரானா வைரஸ் கட்டுக்குள் உள்ளதால் விவசாய பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்படுவதால் ஜூன் 25க்குள் இந்த பணிகள் முடிக்கப்படும். சென்ற வருடம் 532 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர் வாரப்பட்டது. விவசாயிகள் ஒற்றுமையாக இருந்து தூர்வார வேண்டும்.  கடலூர் மாவட்டத்திற்கு உண்டான குடிமராமத்து சிறப்பு தொகுப்பு நிதி ஒதுக்கீடு விரைவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது" என கூறினார். இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் விசுமகாஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர் அருணகிரி, துணிசிரமேடு ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார், விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.