Skip to main content

சாலையில் முதலுதவி செய்து மாணவனுக்கு உயிர் கொடுத்த செவிலியருக்கு எஸ்.பி பாராட்டு!

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

SP praises nurse

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி விபத்தில் சிக்கிய இளைஞருக்கு சாலையில் முதலுதவி செய்த செவிலியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கோட்டூர் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வனஜா, மன்னார்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவருகிறார். நேற்று (03.12.2021) தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் கிராமத்தில் தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தோடு காரில் சென்று மாலை வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடி 6ஆம் நம்பர் வாய்க்கால் அருகே வரும்போது எதிரே, ஒரு இளைஞர் வந்த மோட்டார் சைக்கிள் குறுக்கே வந்த ஆட்டின் மீது மோதி கீழே சாய்ந்தார்.

 

தலையில் பலத்த காயம். கண் முன்னே ரத்தம் கொட்டிய நிலையில் இளைஞன் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதைப் பார்த்து பதறிக்கொண்டு காரிலிருந்து செவிலியர் வனஜா இறங்கினார். ‘எல்லாரும் ஓரமா போங்க’ என்று சொல்லிக்கொண்டே தார்ச்சாலையில் கிடந்த அந்த இளைஞரின் கைகளைப் பிடித்துப் பார்க்கிறார், நெஞ்சில் கை வைத்துப் பார்த்தார். அதில் இதயத் துடிப்பு நின்றுவிட்டிருப்பது தெரியவந்தது. உடனே சி.பி.ஆர் என சொல்லப்படும் இதயத்துடிப்பை மீண்டும் இயக்கச் செய்யும் முதலுதவி சிகிச்சையை அவருக்கு அளித்தார். தனது இரு கைகளாலும் இளைஞனின் நெஞ்சில் வைத்து பலமுறை அழுத்தம் கொடுத்தார்.

 

சில நிமிடங்களாக நின்றிருந்த இளைஞனின் இதயத் துடிப்பு மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதைப் பார்த்து முகம் மலர்ந்த வனஜா, “இனி ஆபத்தில்லை, ரத்தம் அதிகமாக வெளியேறுகிறது. உடனே மருத்துவமனை கொண்டு போகணும்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே 108 ஆம்புலன்ஸ் வந்துவிட, அதில் ஏற்றிவிட்ட பிறகு கருணையோடு நின்ற இதயத்திற்கு உயிர்கொடுத்த செவிலியர் வனஜா தனது காரில் ஏறி வீட்டிற்குச் சென்றார். செவிலியரின் இந்த செயல் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டை பெற்றது. 

 

SP praises nurse

 

இந்தநிலையில் செவிலியரின் உயிர்காக்கும் செயலை திருச்சி மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் பாராட்டினார். தொடர்ந்து மாலையில் திருவாரூர் எஸ்.பி விஜயகுமார் செவிலியரை தனது அலுவலகம் அழைத்து அவரை பாராட்டியதோடு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். சமயத்தில் உயிர் காத்த செவிலியரின் தற்காலிக பணியை நிரந்தப் பணியாக்க வேண்டும் என்ற கோரிக்கை மன்னார்குடி பகுதியில் பலமாக கேட்கிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.