Skip to main content

பாக்யராஜால் பதற்றமான கோவை; எஸ்.பி. பரபரப்பு விளக்கம்

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
SP has explained Bhagyaraj's allegation that incident  happening  Coimbatore

தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தனது சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு தனது அனுபவங்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில், கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பாக்யராஜ் நெஞ்சு பொறுக்குதில்லையே என்று தலைப்பில் பேசி வெளியிட்டிருந்த வீடியோ தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வீடியோவில் பேசும் பாக்கியராஜ், “கோவை  மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் செல்லும் மக்கள் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். தொடக்கத்தில் ஆற்றில் உள்ள சுழலில் மாட்டிக் கொள்வார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. உள்ளூர்க்காரர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு உடலை மீட்டுத் தருவார்.

நாளடைவில் தான் தண்ணீருக்குள் மூச்சைப் பிடிக்கும் தன் திறமையை அவன் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. தண்ணீருக்குள் இறங்குபவர்களை பின்தொடர்ந்து, திடீரென்று காலை பிடித்து இழுத்து பாறைக்குள் சிக்க வைத்துவிடுவார். பிறகு இவரே வெளியில் வந்து அவர்களது உடலை மீட்டுக் கொடுப்பதை தொழிலாக வைத்துள்ளார். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்தப் பகுதிக்கு செல்வோர் கவனமாக இருங்கள்..” என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசி வெளியிட்டார். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நடிகர் பாக்கியராஜ் பகிர்ந்த வீடியோ குறித்து அறிக்கை மூலம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்ததுள்ளார். அந்த அறிக்கையில், “பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. இது சம்பந்தமான குற்றச் சம்பவம் ஒன்று கூட மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் உள்ள பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல்லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள்  வழியாகச் செல்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி 20 நபர்கள் இறந்துள்ளனர். அடிக்கடி நீரில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்பைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட்டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலைமையில் 10  பயிற்சி பெற்ற காவலர்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு மேட்டுப்பாளையம் லைஃப் கார்ட்ஸ் என்ற பெயரில் 2023 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் கடந்த 2023 ஆண்டு ஆற்றில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்துள்ளது.  பயிற்சி பெற்ற காவலர்கள் தொடர்ந்து பணியிலிருப்பதால், கடந்த 2023ம் ஆண்டு 914 மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 2022, 2023 பதிவான அனைத்து வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டது'' என அறிக்கையில் பாக்கியராஜ் வீடியோவில் கூறியதை முற்றிலும் மறுத்தார். 

தொடர்ந்து பவானி ஆற்றில் விபத்து நடக்கும் காரணம் பற்றி அறிக்கையில் கூறிய எஸ்பி, “2022, 2023 பதிவான அனைத்து வழக்குகளிலும் முறையான விசாரணை நடத்தப்பட்டது. அதில் அலட்சியம் அல்லது அதீத நம்பிக்கையே விபத்தில் சிக்கி இறப்பதற்கான காரணம்” எனச் சுட்டிக்காட்டியுள்ளார். இதையடுத்து, இதுபோன்று பவானி ஆற்றில் நடக்கும் விபத்துகளைத் தடுக்க, ஆற்றில் 19 ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலமும் அந்தப் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை எனவும் தனது அறிக்கையில் எஸ்.பி. விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

அறிக்கையின் இறுதியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அம்பாரம்பாளையம் ஆற்றுக்கரையில் கொலைகள் நடைபெறுவதாக பாக்கியராஜ் வெளியிட்ட வீடியோ அடிப்படை ஆதாரமற்றது என்றவர், வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச்செயல் என எச்சரித்துள்ளார். இதையடுத்து, பாக்கியராஜ் வீடியோ குறித்து கருத்து தெரிவித்த அம்பாரம்பாளையம் பகுதி மக்கள், “பவானி, கொடிவேரி ஆறுகள் குறித்து கட்டுக் கதைகள் ஏராளம். மழை பெய்தாலே பில்லூர் அணையிலிருந்து அதிகம் தண்ணீர் வரும், ஆற்றில் ஏற்கனவே ஆங்காங்கே பாறை இடுக்குகள் உள்ளதால் சுழல் ஏற்பட்டு நீச்சல் தெரியாதவர்கள சிக்கிக் கொள்கிறார்கள். ஆற்றின் கரையோரம் இருக்கும் கோவிலில் அவ்வப்போது வேண்டுதல் நிறைவேற  கிடாய் வெட்டுவார்கள். இதில்  நடைபெறும் கறி விருந்துக்கு பின் சிலர் மது போதையோடு ஆற்றுக்குள் இறங்கி அதிகம் சிக்குகிறார்கள். இதில் அதிகம் சிக்குவது ஆற்றின் போக்கு அறியாத வெளியூர் மக்கள் தான். பாக்கியராஜ் சொன்னது அவரின் திரைக்கதைக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஒருவேளை அவருக்கு யாராவது ஆதாரமற்ற தகவலை நம்பும்படி சொல்லிக் கொடுத்திருக்கலாம். ஆனால், பிரபலமான ஒருவர் அதனை மக்களிடம் சொல்லும்போது தீர விசாரித்து சொல்லி இருக்க வேண்டும்..'' என கருத்து தெரிவித்தனர். 

திரைப்பட இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் அடிப்படையில் ஆதாரமற்ற ஒரு தகவலை பரப்பியுள்ளார் என கோவை எஸ்.பியே மறுப்பு தெரிவித்து எச்சரிக்கை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.