Skip to main content

குன்னூர் பேருந்து விபத்திற்கான காரணம் குறித்து எஸ்.பி. விளக்கம்

Published on 02/10/2023 | Edited on 02/10/2023

 

Sp about the cause of the Coonoor bus incident 

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பர்லியாறு என்ற இடத்திற்கு அருகே சுற்றுலா பேருந்து ஒன்று நேற்று முன்தினம் (30-9-2023) மாலை 6 மணியளவில் சென்றுகொண்டிருந்தது. கடந்த 28 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திலிருந்து புறப்பட்டு உதகமண்டலத்திற்கு சுற்றுலா சென்றுவிட்டு இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று தென்காசிக்குத் திரும்பிச் செல்வதற்காகப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த விபத்து சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். தமிழக அரசு சார்பில் நிவாரணமும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் இந்த விபத்தில் சிக்கிய பேருந்தை சுமார் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு 3 ராட்சத கிரேன் உதவியுடன் நேற்று மாலை மீட்கப்பட்டது. இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக 4 பேர் மீது 3 பிரிவின் கீழ் குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதன்படி பேருந்து உரிமையாளர் சுப்பிரமணி (வயது 65), ஓட்டுநர்கள் முத்துக்குட்டி (வயது 65), கோபால் (வயது 32) மற்றும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் (வயது 64) ஆகியோர் மீது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சட்டப்பிரிவு 279, 337, 304 (A) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

இந்நிலையில் இந்த விபத்து குறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘குன்னூர் அருகே பேருந்து கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்ததற்கு பேருந்து ஒட்டுநரின் கவனக்குறைவே காரணம்’ என தெரிவித்துள்ளார். மேலும் இது போன்று விபத்து நடக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், ஆலோசனையையும் காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், ‘மலைக்கு சுற்றுலா வரும் வெளியூர் வாகன ஓட்டிகள் மிகவும் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

 

Sp about the cause of the Coonoor bus incident 

 

அதிலும் குறிப்பாக மலை பிரதேசங்களில் வாகனம் இயக்கும் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். சுற்றுலா வரும் வாகனங்களை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். மலைப்பிரதேச சாலைகளில் வாகனத்தை இயக்குவதற்கு முன்பு வாகனத்தின் தன்மையை கண்டிப்பாக சோதனை செய்ய வேண்டும். நீலகிரி போன்ற மலைப் பிரதேசங்களில் கண்டிப்பாக 35 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்