Skip to main content

கால் நூற்றாண்டு பாச போராட்டம்; பக்ரைனிலிருந்து தந்தையை மீட்ட மகன்! 

Published on 01/08/2022 | Edited on 01/08/2022

 

 The son who saved his father from Bakrain!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், கருங்காலங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சமுத்து(60). இவரது மனைவி நல்லம்மாள்(55). இத்தம்பதிக்கு மணிவேல் எனும் மகனும், சுந்தராம்பாள் என்ற மகளும் உள்ளனர். பிச்சமுத்து கடந்த 1993ஆம் ஆண்டு தோட்ட வேலை செய்வதற்காக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அப்போது முதல் சுமார் ஐந்து ஆண்டுகள் 1997 வரை பச்சமுத்து தனது குடும்பத்தினருக்கு தனது சம்பள பணம் மற்றும் அத்துடன் கடிதத்தை அனுப்பி வந்துள்ளார். அதற்குப் பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. குடும்பத்தினர் அவரை பற்றி தெரிந்து கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எந்த தகவல்களும் அவர்களுக்கு கிடைக்கவே இல்லை. 

 

இந்நிலையில், கடந்த 2007ஆம் ஆண்டு மணிவேல், கட்டட வேலை செய்வதற்காக துபாய்க்கு சென்று நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதன் பிறகு தனது சொந்த ஊரிலேயே ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் பரிசோதனை செய்பவராக வேலை செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

 

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிற்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக பக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் கடந்த டிசம்பர் மாதம் ஒரு அறையில் தங்கி இருந்தபோது, உடல்நிலை சரியில்லாமல் அங்கிருந்த ஒரு முதியவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் தங்கதுரை பேச்சு கொடுத்த போது, அந்த முதியவர் தனது பெயர் பச்சமுத்து என்றும் தனக்கு நேர்ந்த சிக்கல்களை கூறியதோடு, தங்கத்துரையின் கிராமமான சிறுபாக்கம் கிராமத்தில் தனக்கு முத்துசாமி என்ற உறவினர் உள்ளதையும் கூறியுள்ளார். 

 

உடனே தங்கதுரை, சிற்பக்கத்தில் உள்ள முத்துசாமியிடம் பேசி முதியவர் பச்சமுத்துவின் நிலை குறித்து தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து முத்துசாமி, பச்சமுத்துவின் மகன் மணிவேலுக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு மணிவேல் பக்ரைனில் பணிபுரிந்து வரும் தனது நண்பர் நாகராஜ் என்பவரை தொடர்பு கொண்டு, தங்கத்துரை முகவரியை கூறி அங்கே சென்று தனது தந்தையை நேரில் கண்டு நிலைமையை தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளார். அதன்படி அங்கு சென்ற நாகராஜ், வீடியோ கால் மூலம் பச்சமுத்துவை தனது மகன் மணிவேலுடன் பேசவைத்துள்ளார். அப்போது தனது தந்தை பச்சமுத்து உயிருடன் இருப்பதை அறிந்த மணிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

அவரை பக்கரையின் நாட்டில் இருந்து ஊருக்கு அழைத்து வரும் முயற்சித்த மணிவேல், தந்தையின் நிலையைக் குறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் அனுப்பினார். அதைத் தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரிகள் தகவல் சரி பார்ப்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பச்சமுத்து குறித்து தகவலை அனுப்பி அதை உறுதி செய்யுமாறு கேட்டனர். மணிவேல், தனது தந்தையின் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கள்ளக்குறிச்சி எஸ்.பி. அலுவலகத்தில் கொண்டு போய் சமர்ப்பித்தார். 

 

அதன் பிறகு தூத்துக்குடியைச் சேர்ந்த அன்னை தமிழ் மன்றத் தலைவர் செந்தில்குமார் என்பவரின் உதவி மணிவேலுக்கு கிடைத்தது. அவர் மூலம், பக்ரைநாட்டில் உள்ள அன்னைத் தமிழ் மன்ற நிர்வாகிகள் பச்சமுத்து இருக்கும் இடத்திற்கு சென்று, அவருக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை கிடைக்கச் செய்தனர். மேலும் பக்ரைனிலிருந்து சொந்த ஊருக்கு பச்சமுத்துவை அழைத்து வருவதற்கான பணிகளை மேற்கொண்டனர். அதன்படி அன்னைத் தமிழ் மன்றச் செயலாளர் தாமரைக்கண்ணன் விமானத்தில் பச்சமுத்துவை சென்னைக்கு அழைத்துவந்தார். அங்கு மணிவேலிடம் அவரது தந்தை பச்சமுத்துவை ஒப்படைத்தார். 

 

தனது இரண்டரை வயதில் பிரிந்த தந்தையை 29 ஆண்டுகள் கழித்து கண்ட மகனும் தந்தையும் மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதனர். அங்கிருந்து மணிவேல் மற்றும் பச்சமுத்து ஆகியோர் தங்களது சொந்தக் கிராமமான கருந்தலாகலாக்குறிச்சி கிராமத்திற்கு வந்தனர். அங்கு, பச்சமுத்துவின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் அவரைக் கண்டு மகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு அழுதனர். 

 

இதுகுறித்து பச்சமுத்து கூறியதாவது; “29 ஆண்டுகளுக்குப் பிறகு எனது வயதான காலத்தில் குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்தது இறைவனின் செயல். இறுதிக்காலத்தை எனது மகன், மகள், மனைவி பிள்ளைகளோடு வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று நான் எண்ணிய எனது ஏக்கம் கனவு தற்போது அது நிறைவேறி உள்ளது” என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.