Skip to main content

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு; இளைஞர்கள் அதிர்ச்சி

Published on 06/12/2022 | Edited on 06/12/2022

 

snake catch in fishing net youngster shock

 

கல்வராயன் மலையில் உற்பத்தியாகும் மணிமுத்தாறு, கோமுகி ஆறு என்ற இரு ஆறுகளும் கடலூர் மாவட்டம் நல்லூர் அருகே ஒன்றாக இணைந்து மணிமுத்தாறு என்ற பெயரில் வெள்ளாற்றில் கலந்து பரங்கிப்பேட்டை அருகே கடலில் கலக்கிறது. சமீப நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து பெய்த  கன மழையின் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், வேப்பூர் அருகே உள்ள ஆற்றின் கரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் இந்த ஆற்றில் மீன் பிடித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், வேப்பூர் அருகே  உள்ள நல்லூர் கிராமத்தில் நேற்று ஆற்றில் மீன் பிடிப்பதற்காக வலையை வீசி உள்ளனர். அந்த வலையை இழுக்கும்போது வலை மிகவும் கனமாக இருந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த  இளைஞர்கள் வலையில் நிறைய மீன்கள் சிக்கி இருப்பதாக வலையை கரைக்கு இழுத்துச் சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

வலையில் சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் இது குறித்த தகவலை வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வலையில் சிக்கி இருந்த மலைப் பாம்பை  மீட்டு வனத்துறைக்குச் சொந்தமான காப்பு காட்டில் விட்டுச் சென்றுவிட்டனர். "கல்வராயன் மலைப் பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், இந்த மலைப்பாம்பு ஆற்றுக்கு இழுத்து வரப்பட்டிருக்கலாம்" என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மீன் வலையில் மலைப் பாம்பு சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Next Story

ரயிலில் புகுந்த பாம்பு; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
A snake that entered the train; Tragedy befell the young man


கேரளாவில் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸில் தென்காசியைச் சேர்ந்த கார்த்திக் சுப்பிரமணியம்(21) என்ற இளைஞர் பயணித்தார். ரயிலின் 7ஆம் நம்பர் கோச்சில் அவர் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, ரயில் எட்டுமானூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார்த்திக் சுப்பிரமணியம் தன்னை ஏதோ கடித்தது போல் உணர்ந்துள்ளார். உடனடியாக அந்தப் பகுதியைச் சோதனையிட்டு பார்த்ததில் அங்கு ஒரு நாகப்பாம்பு சுருண்டு கிடந்தது கண்டு அதிர்ந்துபோனார்.

தன்னை பாம்பு கடித்ததை உணர்ந்த கார்த்திக் மற்ற பயணிகளிடம் இதனைச் சொல்ல உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, கோட்டயம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அந்த ரயில் பெட்டிக்குள் எலிகள் அங்கும் இங்குமாக ஏராளமாக ஓடிக் கொண்டிருந்ததாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக எலிகளை உணவாக சாப்பிட பாம்பு அங்கு வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், கோட்டயம் ரயில் நிலையத்திலேயே அந்தப் பெட்டி மட்டும் தனியாக கழட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ரயிலில் பயணித்த தமிழக இளைஞரைப் பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.