Skip to main content

சிவகாசியில் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல்!- ஏவியது ராஜேந்திரபாலாஜியா? ராஜவர்மனா?

Published on 04/03/2020 | Edited on 04/03/2020

    குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் கார்த்தி சிவகாசி பெல் ஹோட்டல் முன்பாக மர்ம நபரால் தாக்கப்பட்டார். கைலியும் கட்டம் போட்ட சட்டையும் அணிந்திருந்த அந்த மர்ம ஆசாமி தாடியும் வளர்த்திருந்தான். கூட்டாளிகள் சிலர் தள்ளி நிற்க, அவன் மட்டும் ‘ஏன்டா நியூஸா போடுற?’ என்று கார்த்தியின் பின்னந்தலையில் இரும்பு ராடால் ஓங்கி அடித்தான். அரிவாளால் முகத்திலும் வாயிலும் மாறி மாறி வெட்டினான். அவனது தொடர் தாக்குதலில் இருந்து தப்பி ரத்தம் சொட்டச் சொட்ட ஓடினார், கார்த்தி. தற்போது சிவகாசியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த நிலையிலும், தன் மீதான தாக்குதலை சைகை மூலம் நமக்கு விளக்கினார்.   

sivakasi reporter incident police investigation

 

கார்த்தி மீது ஏன் இந்தக் கொலைவெறித் தாக்குதல்?

தாக்குதல் நடந்த 3-ஆம் தேதி வெளிவந்த குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ‘ராஜேந்திரபாலாஜியை வீழ்த்துவாரா ராஜவர்மன்?‘ என்னும் தலைப்பில் கார்த்தி எழுதிய கட்டுரை பிரசுரமாகி இருந்தது. அதில், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக, அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் வாள் சுழற்றுகிறார் என, ஜாதி அரசியலைத் தொட்டு, பின்னணியில் இருப்பது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்றும், கான்ட்ராக்ட், கமிஷன் விவகாரங்களில் இன்டர்மீடியேட்டராகச் செயல்பட்டதால் ராஜவர்மனின் வசதி வாய்ப்புகள் கூடிவிட்டது என்றும், களப்பணிகளிலோ, கட்சி நடத்திய போராட்டங்களிலோ கலந்துகொள்ளாத ராஜவர்மன் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார் என்றும் விவரிக்கப்பட்டிருந்தது.

 

 

 

கட்சி நிர்வாகிகளை மிரட்ட துப்பாக்கியைக் கையில் எடுத்தார்; வெற்றுச்சவடால் பேச்சால் அதிமுகவை அழிக்கிறார்; ஆணவமாகப் பேசுகிறார்; ஆபாசமாகத் திட்டுகிறார்; ராஜவர்மனை சமாளிக்க முடியாமல் திணறுகிறார் என்று ராஜேந்திரபாலாஜியின் மைனஸ்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.  மேலும், அமைச்சரை சுற்றியிருப்பவர்கள் ராஜவர்மன் விசிறியடிக்கும் பணத்துக்கு விலைபோய் விட்டார்கள் என்று சிலரது பெயர்கள் பட்டியலிடப்பட்டிருந்தன.

sivakasi reporter incident police investigation

ஆர்.பி.உதயகுமார் மட்டுமல்ல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் வேலுமணி போன்றோரும் ராஜவர்மனின் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூட, ராஜவர்மன் மூலம் ராஜேந்திரபாலாஜிக்கு செக் வைக்கிறார் என்றும் அக்கட்சியின் முன்னணி தலைவர்களின் பெயர்களும் அச்செய்தியில் அடிபட்டன.

இந்தக் கட்டுரையால் யார் யார் எரிச்சல் அடைந்திருப்பார்கள் என்று பார்த்தால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பேர் மீதுமே சந்தேகம் எழும். தாக்குவதற்கு ஆட்களை ஏவியவர் யாராக இருக்கும் என்று அந்த வட்டத்தைச் சுருக்கிப் பார்த்தால், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மன் எம்.எல்.ஏ., ஆகிய இருவர் மட்டுமே தெரிகின்றனர்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை தொடர்பு கொண்டோம். “நான் நிருபர் கார்த்தியிடம் செய்தி குறித்து பேசினேன். தன்னிடம் சில ஆதாரங்கள் உள்ளதாகவும், நானே சென்னை வந்து நேரில் தருகிறேன் என்றும் கூறினார். கேள்விப்பட்ட தகவல்களை விசாரித்து எழுதுவதுதான் பத்திரிக்கையாளரின் பணி. அதைத்தான் அவர் செய்திருக்கிறார். இதற்காக, நான் ஏன் கோபப்பட வேண்டும்? அந்த மர்ம நபர்,  முதலில் நிருபரிடம் செல்போனில் பேசிவிட்டு, பிறகு நேரில் வந்து தாக்கியதாகச் சொல்கிறார்கள். நிருபர் தாக்கப்பட்ட இடம் மெயின் ரோடு என்கிறார்கள். இந்த டெக்னாலஜி காலத்தில், காவல்துறையால் குற்றவாளியை சுலபமாகப் பிடித்துவிட முடியும். யாருக்காக, என்ன காரணத்துக்காக தாக்கினான் என்பது, அவன் பிடிபட்டால் தெரிந்துவிடப் போகிறது,” என்றார் கூலாக.

sivakasi reporter incident police investigation

சாத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் ராஜவர்மனோ “நான் ஒரு காந்தியவாதி. என்னை விமர்சித்து  இதற்குமுன்பும் எத்தனையோ செய்திகள் வந்திருக்கின்றன. நான் எதுவும் செய்தேனா? இதுபோன்ற செய்திகளையெல்லாம் நான் கண்டுகொள்வதே இல்லை.குடும்பத்தோடு திருச்செந்தூருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.” என்றார்.

நள்ளிரவு கடந்தும் காவல்துறை அதிகாரிகள் மாறி மாறி கார்த்தியை விசாரித்து வருகின்றனர். ‘என்ன பேசினாலும் சர்ச்சையாகி விடுகிறது’ என்பதை உணர்ந்தோ என்னவோ, மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மேடையில் வரவேற்புரை நிகழ்த்தியபோது, முதல்வர் எடப்பாடி முன், அடக்கியே வாசித்தார், ராஜேந்திரபாலாஜி. செய்தி வெளிவந்த அன்றே, இத்தனை அவசரமாக, பத்திரிக்கையாளர் ஏன் தாக்கப்பட வேண்டும்? இதன் பின்னணியில் ராஜேந்திரபாலாஜி எப்படி இருப்பார்? என்ற கோணத்திலும், அதிரடியாகப் பேச மட்டுமல்ல, நடக்கவும் செய்வார் ராஜேந்திரபாலாஜி. தன்னைச் சுற்றி முரட்டுத்தனமான பக்தர்களை வைத்திருக்கிறார். அவர்களில் யாரேனும் விசுவாசத்தைக் காட்டுவதற்காக இதைச் செய்திருக்கக்கூடும் என்ற கோணத்திலும், நிருபர் கார்த்தியை யார் தாக்கினாலும், அது அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தலையில்தான் விடியும் என்ற திட்டத்தோடு, ராஜவர்மனே இந்தக் காரியத்தை யார் மூலமோ செய்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும், தமிழகத்தில் அமைச்சர்கள் யாருக்கும் கிடைக்காத விளம்பரம், பேட்டி அளிக்கும்போதெல்லாம் ராஜேந்திரபாலாஜிக்கு கிடைத்துவிடுகிறதே என்ற பொறாமையில், அவரைச் சிக்க வைப்பதற்காக, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள், ராஜவர்மனைக் கையில் எடுத்து, இதைச் செய்திருக்கக்கூடும் என்ற கோணத்திலும் பலவாறாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

“என்னுடைய போனிலிருந்து நான் பேசவில்லை. என் பெயர் ஆரோக்கியம். கே.டி.ஆருக்கு எதிராக ஒரு ஆவணம் இருக்கிறது.” என்று ஒருவன் போனில் பேசியதாகவும், அதன் பிறகே தான் தாக்கப்பட்டதாகவும் எழுதிக் காண்பித்தார் கார்த்தி. தாக்க வருபவன், உண்மையான பெயரை போனில் சொல்லிவிட்டா வருவான்? நியூஸ் வெளியிட்டதற்காகத்தான் உன்னை அடிக்கிறோம் என்று காரணத்தைக் கூறிவிட்டா அடிப்பான்?  எங்கோ இடிக்கிறது அல்லவா?

“கால் லிஸ்ட், சிசிடிவி ஃபுட்டேஜ் என அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். குற்றவாளி தப்பவே முடியாது.” என்று அடித்துச் சொல்கிறார்கள், காவல்துறையினர்.

 

  

  

  

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

வைரலான சி.சி.டி.வி.! ஓட்டல் ஓனரைக் கத்தியால் குத்திய சகோதரர்கள் கைது!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Sivakasi viral cctv police arrested two

‘பார்சல் வழங்குவதற்குத் தாமதமானதால் ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து’ என சிவகாசி – மாரனேரியில் நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மாரனேரி காவல்நிலையம், ஏ.துலுக்கபட்டியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன்கள் மாரீஸ்வரன் மற்றும் பாண்டீஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்தது.

ஜெகநாதன் என்பவர் ஆலங்குளம் சாலையில் ஜே.ஜே. ஓட்டல் நடத்துகிறார். அவருடைய ஓட்டல் தொழிலுக்கு உதவியாக மகன்கள் கரிமால், ராஜேஸ் கண்ணன், வாசுதேவன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இரவு 8 மணியளவில், மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் அந்த ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கச் சென்றனர். அப்போது ராஜேஸ் கண்ணன் ஓட்டலுக்குள் செல்லும்போது தெரியாமல் இடித்துவிடுகிறார். உடனே இருவரும்  “பார்த்துப் போகவேண்டியதுதானே..” என்று ராஜேஸ் கண்ணனைக் கெட்ட வார்த்தையால் திட்டுகின்றனர். கரிமாலும் ஓட்டலில் இருந்தவர்களும் இருவரையும் சத்தம்போட,  “உங்களை வந்து வச்சிக்கிறோம்.” என்று சென்றுவிட்டனர்.

அடுத்த 15 நிமிடங்களில் மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் மீண்டும் ஓட்டலுக்கு வந்து வாசுதேவனைக் கத்தியால் குத்தினார்கள். அப்போது கரிமாலும் வாசுதேவனும் பிடிக்க முயன்றபோது, வாசுதேவனுக்கு கையில் காயமேற்பட்டது. கரிமாலும் ஓட்டலில் இருந்த மற்றவர்களும் கத்தி வைத்திருந்த சகோதரர்களுடன் மல்லுக்கட்டியபோது “எங்கள பகைச்சுக்கிட்டா கத்தியால குத்தி கொன்றுவிடுவோம்..” என்று மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் கரிமால் அளித்த புகாரின் பேரில், மாரனேரி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து இருவரையும் தேடிவந்தது. தற்போது மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் கைதாகியுள்ளனர்.