Skip to main content

வாரிசு வேலை தகராறு! போலீஸ்காரரின் தாய் உள்ளிட்ட இருவர் கொலை!

Published on 13/02/2023 | Edited on 13/02/2023

 

Sivakasi government job issue two passed away

 

வாரிசு வேலை வாங்கிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில், சிவகாசி அருகே போலீஸ்காரர் ஒருவரின் தாய் உள்ளிட்ட இரு பெண்கள் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

சிவகாசி, ஆயில் மில் காலனியைச் சேர்ந்த ரவி சிவகாசி மாநகராட்சியில் துப்பரவு பணியாளர் வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ரவி உயிரிழந்தார். ரவிக்கு ரதிலட்சுமி என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். ரவி இறந்ததைத் தொடர்ந்து, வாரிசு அடிப்படையில் அவருடைய வேலைக்கு மனைவி ரதிலட்சுமி முயன்றிருக்கிறார். ரவியின் தாய் முருகேஸ்வரியிடம் இதுகுறித்து பேசியிருக்கிறார். அப்போது முருகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். வாரிசு வேலையை பேரன் ராகுலுக்கு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.

 

Sivakasi government job issue two passed away

 

சிவகாசி ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள முருகேஸ்வரியின் வீட்டில் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். அங்கு ரதிலட்சுமியின் சகோதரர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் துப்புரவாளராகப் பணிபுரியும் காளீஸ்வரன் மற்றும் ரதிலட்சுமியின் உறவினர்கள் இருந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகேஸ்வரியையும் (வயது 50) உறவினர் தமயந்தி கருப்பாயியையும் (60) காளீஸ்வரன் குத்திக் கொலை செய்துள்ளார். திருத்தங்கல் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவாகி, காளீஸ்வரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.  

 

கொலையான முருகேஸ்வரியின் மகன் கணேசன் பக்கத்து ஊரான எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் போலீஸ்காரராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 


 

சார்ந்த செய்திகள்