Skip to main content

படம் எடுக்க கதைக்குத்தான் பஞ்சம் என்றால், தலைப்பு வைக்கக்கூடவா வறட்சி? சிவாஜி சமூக நலப்பேரவை

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

 

நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கர்ணன் பெயரை மீண்டும் பயன்படுத்த வேண்டாம் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

sivaji



அந்த அறிக்கையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்து 1964ஆம் ஆண்டு வெளிவந்த மகாபாரதக் காவியமான கர்ணன் திரைப்படம் மறு வெளியீட்டிலும் இன்றளவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 

ஆனால், அதே பெயரில், (கர்ணன்) தனுஷ் நடிக்க, கலைப்புலி தாணு அவர்கள் தயாரிப்பில் மீண்டும் தற்போது திரைப்படம் தயாராகி வருவது அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். "கர்ணன்” என்ற பெயரை மீண்டும் பயன்படுத்திக்கொள்வதற்கு, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அனுமதி அளித்திருப்பது வருந்தத்தக்கது.
 

பல திரைப்படங்கள் மீண்டும் அதே பெயரில் வெளிவருவது ஒன்றும் புதிதல்ல (உதாரணம்: ஆண்டவன் கட்டளை, பச்சை விளக்கு, ஆயிரத்தில் ஒருவன், எதிர்நீச்சல்). ஆனால், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கர்ணன் போன்ற புராணப் படங்களும், வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜராஜசோழன் போன்ற சரித்திரப் படங்களும், கப்பலோட்டிய தமிழன் போன்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் படங்களும், அதன் தலைப்பே திரைப்படத்தின் உட்கருத்தைச் சொல்வனவாக, காலத்திற்கும் அழிக்கமுடியாததாகத் திகழ்ந்துகொண்டிருப்பவையாகும். 


 

சட்டப்படி அல்லது தங்களின் திரைப்பட வர்த்தக சபை விதிகளின்படி இப்பெயர்களை மீண்டும் வைப்பதில் எந்தத் தடையும் இல்லாமல் இருந்தாலும், ரசிகர்கள், மத உணர்வாளர்கள், வரலாற்றை நேசிக்கும் ஆர்வலர்களின் மனம் புண்படும் வகையில், புராணங்களையும், வரலாற்றையும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தையும், கொச்சைப்படுத்தும் விதத்திலேயே அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 
 

அந்த அடிப்படையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட “கர்ணன்” திரைப்படத் தலைப்பை, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரும்பப் பெறவேண்டும் என, லட்சோப லட்சம் ரசிகர்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.
 

திரைப்படக் கதைக்குத்தான் பஞ்சம் என்றால், தலைப்பினை வைப்பதற்குக்கூடவா படைப்பாளிகளுக்கு வறட்சி ஏற்பட்டுவிட்டது? இனி வருங்காலத்திலாவது, பழைய திரைப்படங்களின் பெயர்களை மீண்டும் வைத்திட அனுமதி கோரும்போது, எந்திரத் தனமாக முடிவெடுக்காமல், அந்தந்த மொழியின் கலைஞர்கள், அறிஞர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து அவர்களின் பரிசீலனைக்குப் பிறகு அனுமதித்தால் நன்றாக இருக்கும். எங்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் அமல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Israel-Hamas issue temporary stop Enforces

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 46வது நாளாகப் போர் நீடித்து வந்த நிலையில், காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். 

 

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று (23-11-23) காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது. பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இது குறித்து இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பிணைக்கைதிகளின் விடுதலை வெள்ளிக்கிழமை (24-11-23) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான் ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

“சிவாஜி கணேசனின் புகழ் தரணியும் தமிழும் உள்ளவரை நிலைத்திருக்கும்” - முதல்வர் புகழாரம்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Shivaji Ganesan's fame will last as long as Tharani and Tamil exist says CM

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்த தினம் இன்று. இதனைக் கொண்டாடும் விதமாகச் சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இன்று காலை முதல் நடிகர் சிவாஜியின் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். அதேபோல் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நடிகர் திலகம் அவர்களின் 96 ஆவது பிறந்தநாள் இன்று. நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ், தரணியும் தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.