Skip to main content

ஒருவர் என்கவுண்டர்... மூவர் கைது... பரபரப்பான சீர்காழி இரட்டைக் கொலை சம்பவம்..!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

 Sirkazhi theft case police arrested three


சீர்காழியில் தங்கம், வெள்ளி மொத்த வியாபாரியின் வீட்டில் வடமாநில கொள்ளையர்கள் புகுந்து இரண்டு பேரை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு, கொள்ளை அடித்த சம்பவத்தில் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.

 

17 கிலோ தங்கம், இரண்டு துப்பாக்கி, செல்ஃபோன்கள், கொள்ளையடித்த வீட்டிலிருந்து எடுத்துச்சென்ற ஹார்டிஸ்க் என பலவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதோடு கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த கும்பகோணத்தைச் சேர்ந்த கருணாராம் என்பவனையும் போலீஸார் கைது செய்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ். இவர், தருமகுளத்தில் நகை அடகு கடையை பகுதி நேரமாகவும், தங்கம், வெள்ளி விற்பனையை மொத்த வியாபாரமாகவும் செய்து வருகிறார். நேற்று (27 ஜன.) காலை 6 மணி அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் இவர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். தன்ராஜ், கதவை திறந்தவுடன் அந்த மூவரும் அவரை  தள்ளிவிட்டுவிட்டு உள்ளே சென்றுள்ளனர். கூரிய ஆயுதங்களோடு உள்ளே வருவதைப் பார்த்த தன்ராஜ் மனைவி ஆஷாவும் அவரது மகன் அகிலும் சத்தம் போட்டுள்ளனர். சத்தம் போடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள், அவர்கள் இருவரையும் கழுத்து அறுத்துப் படுகொலை செய்துள்ளனர். 

 

 Sirkazhi theft case police arrested three
                                                          மனீஷ்

 

அதைத் தொடர்ந்து படுக்கை அறையில் கட்டிலின் அடியில் இருந்த 17 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு வெளியே போகும்போது தன்ராஜையும் அவரது மருமகள் நெக்கல்லையும் கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு, வீட்டினுள்ளே இருந்த சி.சி.டி.வியின் ஹார்டிஸ்கை எடுத்துக்கொண்டு தன்ராஜின் காரிலேயே தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்துவந்த காவல்துறையினர், படுகாயமடைந்த இருவரையும் சீர்காழி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

 

இதுகுறித்து, சம்பவ இடத்தில் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விசாரணை மேற்கொண்டார். குற்றவாளிகள் தப்பிப்பதற்குப் பயன்படுத்திய கார் ஒலையாம்புத்தூர் சாலையில் நின்றுகொண்டிருப்பாதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற காவல் கண்காணிப்பாளர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏதாவது தடயம் கிடைக்கிறதா என சோதனை நடத்திக்கொண்டிருந்த நிலையில், எருக்கூர் மேலத்தெரு என்கிற இடத்தில் சந்தேகப்படும்படியான 3 நபர்கள் வயலில் அமர்ந்திருப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

 

 Sirkazhi theft case police arrested three
                                                              ரமேஷ் 

 

சந்தேகப்படும்படியான நபரைப் பிடிப்பதற்கு போலீசார் முயற்சி செய்தனர். அப்பொழுது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரையும், பொதுமக்களையும் மிரட்டி உள்ளனர். துணிச்சலாக முன்னேறிய காவல்துறையினர், அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பிடிபட்டவர்களில் ஒருவரை காவல்துறையினர் வயல்வெளிக்கு அழைத்துச் சென்று வயலில் மறைத்து வைத்திருந்த நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

 

வயலில் பதுக்கி வைத்திருந்த நகை பையை எடுக்க மணிபால் சிங் என்ற கொலையாளியை அழைத்துச் சென்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டக் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான போலீஸார் என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டர் செய்யப்பட்டவரின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கொள்ளையர்களிடம் இருந்து  17 கிலோ நகைகள் பறிமுதல் செய்தனர்.

 

 Sirkazhi theft case police arrested three
                                                   கருணாராம்

 

சி.சி.டி.வி. ஹார்டிஸ்கைப் பறிமுதல் செய்ததோடு மற்ற கொலைக் குற்றவாளிகளான ரமேஷ், மணிஸ் ஆகிய இருவரையும் சீர்காழி காவல் நிலையத்தில் ஐ.ஜி. ஜெயராம் விசாரணை நடத்தினார். அவரது விசாரணையில் இந்தக் கொலைக்கும், கொள்ளைக்கும் மூலக் காரணமாக இருந்தது கும்பகோணம் பகுதியில் செருப்புக் கடை வைத்திருக்கும் கருணாராம் என்பதைக் கண்டுபிடித்து, அவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆதினத்துக்கு மிரட்டல்; பள்ளி தாளாளரின் ஜாமீன் மனுவில் நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரத்தில் ஆதீன சைவ மடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27ஆவது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார். இந்தச் சூழலில் தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி (21.02.2024) புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், ‘தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை நேரில் சந்தித்து ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ தங்களிடம் இருப்பதாக மிரட்டினர். மேலும், அவர்கள் அந்த வீடியோவை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால், பணம் தர வேண்டும் என்று கூறி என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்தனர்.

இந்தச் சம்பவத்தில் செம்பனார்கோவிலைச் சேர்ந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, பா.ஜ.க. கட்சியின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம், மடாதிபதியின் உதவியாளர் செந்தில், வினோத் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி கைது செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து பா.ஜ.க. பிரமுகர் அகோரம் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு கடந்த மார்ச் 6 ஆம் தேதி (06.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியும், வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதையும் கருத்தில் கொண்டு அகோரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து மும்பையில் தலைமறைவாக இருந்து வந்த அகோரத்தை கடந்த மார்ச் மாதம் 15 ஆம் தேதி (15.03.2024) தமிழக தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்திருந்தனர்.

இதனையடுத்து கைதான பாஜக மாவட்ட தலைவர் அகோரம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 8 ஆம் தேதி (08.04.2024) நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வாதிடுகையில் ‘அகோரம் மீது 47 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது’ என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவுசெய்து கொண்ட நீதிபதி இந்த வாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையைக் கடந்த 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார். 

The court takes action in the bail application of the school principal on Intimidation to Adinam

இந்த நிலையில், கைது செய்யப்பட்டிருந்த பிரபல கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘தனக்கு சர்க்கரை நோய், இருதய பாதிப்பு இருப்பதால், தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்படும். எனவே, நிபந்தனை ஜாமீன் பேரில் என்னை விடுவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு இன்று (24-04-24) வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், ‘இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, பள்ளி தாளாளர் குடியரசுவை ஜாமீனில் விடுவிக்க கூடாது’ எனக் கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி தமிழ்ச்செல்வி, குடியரசுவின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.