நீதிமன்ற பணிகளுக்காகச் செல்லும் வழக்கறிஞர்களை காவல்துறை தடுக்கக்கூடாது என உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கலையரசி தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், கடந்த வெள்ளிக்கிழமை, போரூரிலிருந்து மூத்த வழக்கறிஞர் அலுவலகத்திற்கு பணிக்காக செல்லும் வழியில், காவல்துறையால் நான் தடுக்கப்பட்டேன். இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிப்போம் என காவல்துறையினர் தெரிவித்தனர். கடுமையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டாலும், ஆன்லைன் வழியாக நீதிமன்றங்கள் செயல்பட்டுவரும் நிலையில், டெல்லி உள்ளிட்ட மற்ற மாநிலங்களில், நீதிமன்ற வழக்கு விசாரணை பணிகளுக்காக, வழக்கறிஞர்கள் சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற மாநிலங்களில் அனுமதிக்கும்போது, சென்னையில் சொந்த அலுவலகங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யும் பணி பாதிக்கப்படுகிறது. மேலும், ஆன்லைனில் வழக்கு தாக்கல் செய்தாலும், கூடுதல் ஆவணங்களை உயர்நீதிமன்றத்தில் நேரடியாக தரச்சொல்லி நீதிமன்ற அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். அலுவலக ரீதியாகச் செல்லும் வழக்கறிஞர்களை காவல்துறை அனுமதிக்க உத்தரவிடவேண்டும் என்று அதில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.