Skip to main content

"மூன்று வாரத்துக்கு முன்னாடி துறுதுறுன்னு இருந்தான்; ஆனால், இப்ப..." மகனின் சிகிச்சைக்காக தாய் நடத்தும் பாசப்போராட்டம்!

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

Tejveer

 

அரிய வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் தேஜ்வீரின் சிகிச்சைக்கு உதவுங்கள் என கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு அதிகம் பகிரப்பட்டுவருகிறது. மத்திய ஆப்ரிக்காவில் பரவலாகக் காணப்படும், குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய 'பர்கிட் லிம்போமா' எனும் புற்றுநோய், இந்தியாவில் மிக அரிதானது. இத்தகைய சூழலில், அந்த நோய் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன் தேஜ்வீர் யாரென விசாரிக்கத் தொடங்கினோம். முடிவில், அவர் சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்பவரின் இளைய மகன் எனத் தெரியவந்தது. தன்னுடைய மகனின் சிகிச்சைக்காக உதவி கோரி பதிவிட்டிருந்த ஷர்மிளாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்தோம்.

 

"மூனு வாரத்துக்கு முன்னாடிவரை ஓடிஆடி விளையாடிட்டு நல்லாதான் சார் இருந்தான்... கண்ண மூடி திறந்த மாதிரிதான் இருக்கு... அதுக்குள்ள எல்லாம் இப்படி ஆகிருச்சு..." என தழுதழுத்த குரலில் பேசத் தொடங்கிய ஷர்மிளாவின் கண்களில் கண்ணீர் பொங்கிவழிந்தது. ஆறுதலாக சில வார்த்தைகள் கூறி அவரை ஆசுவாசப்படுத்தினோம். மீண்டும் பேசத்தொடங்கிய ஷர்மிளா, அனைத்தையும் விளக்கிக் கூறினார்.

 

"நான் ஒரு கல்லூரியில் ப்ரொபசரா வேலை பார்க்கிறேன் சார். மொத்தம் எனக்கு ரெண்டு குழந்தைங்க. சின்னவன் தேஜ்வீர்தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கான். மூன்று வாரத்துக்கு முன்னாடி வயிறும் நெஞ்சும் வலிக்குதுன்னு சொன்னான். நாங்க பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டல்ல ட்ரீட்மெண்ட் எடுத்தோம். இருந்தாலும், வயிறு வலி மட்டும் தொடர்ந்து இருந்துச்சு. பிறகு ஸ்கேன் பண்ணி பார்த்தா ரிப்போர்ட்ல கேன்சர்னு வந்துருச்சு. அதுவும் 'பர்கிட் லிம்போமா'னு சொல்லுற அரிய வகை ரத்த புற்றுநோயாம் சார். ஆப்ரிக்காவில்தான் இந்த நோய் அதிகமாக இருக்குதாம். இந்த நோய் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் போய்கிட்டிருக்குது. எதனால இந்த நோய் ஏற்படுதுன்னு இன்னைக்குவரை சைன்டிஸ்ட்டாலயே கண்டுபிடிக்க முடியல. என் பையனுக்கு இப்ப மூணாவது ஸ்டேஜ்ல இருக்குனு சொல்றாங்க. கீமோதெரபி சிகிச்சைதான் பண்ணப்போறோம். கல்லீரல், நுரையீரல் உட்பட நான்கு உறுப்புகளைப் பாதிச்சிருக்கு. ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சு பத்து நாளுக்குமேல ஆகிருச்சு. எங்களோட சேவிங்ஸ் எல்லாம் இதுவரைக்கான ட்ரீட்மெண்ட்டுக்கு செலவு பண்ணிட்டோம். சிகிச்சைக்கு குறைந்தபட்சமே 25 லட்சத்திற்கும்மேல ஆகும்னு சொல்லிருக்காங்க. என்ன பண்றதுன்னு தெரியல. வேற எந்த ஆப்ஷனும் இல்லன்னு தெரிஞ்ச உடனேதான், மக்கள்கிட்ட உதவி கேட்ருக்கோம். நம்ம மக்கள் உதவுவாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு..." எனக் கூறும்போதே மீண்டும் எமோஷனல் ஆனார் ஷர்மிளா.

 

அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருக்கையில், சைகையால் அழைத்து தனக்கு வாந்தி வருவதாகத் தெரிவித்தான் தேஜ்வீர். வாந்தி எடுத்த பிறகு அவனுக்குத் தேவையான உதவிகள் செய்துகொடுத்துவிட்டு மீண்டும் நம்மிடம் பேச வந்தார். மூச்சுவிட சற்று சிரமப்பட்ட சிறுவன் தேஜ்வீரின் அந்த நிலை நம்மை கண்கலங்க வைத்தது. புற்றுநோய்க்கு முந்தைய தேஜ்வீர் எப்படி எனக் கேட்டோம்.

 

"ரொம்ப துறுதுறுன்னு இருப்பான் சார். எல்லார்கிட்டயும் அன்பா பழகுவான். கிளாஸ்ல ரெண்டு பசங்களுக்கு இடையில பிரச்சனைனா இவன்தான் ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பான். அவங்க மிஸ்கூட அதை ரொம்ப பெருமையா சொல்லிருக்காங்க. படிப்பு கொஞ்சம் சுமார்தான் சார். ஆனால், ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட். கராத்தேல பிரௌன் பெல்ட்டெல்லாம் வாங்கிருக்கான். இந்தியாவுக்காக நான் ஒருநாள் ஒலிம்பிக்ல கராத்தே விளையாடுவேன்னு அடிக்கடி சொல்வான் சார். அவன் அப்படி சொல்லும்போதெல்லாம், "டேய் ஒலிம்பிக்ல கராத்தேயே கிடையாதுடா”ன்னு அவனோட அண்ணன் கிண்டல் பண்ணுவான். இந்த முறைதான் டோக்கியோ ஒலிம்பிக்ல முதன்முறையா கராத்தேவ சேர்த்தாங்க. அந்த விஷயம் தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டான். இப்ப அவனுக்கு 11 வயசுதான் ஆகுது. இன்னும் நாலு வருஷம் கழிச்சு ஏதாவது பெரிய கராத்தே அகாடெமில அவன சேர்த்துவிடலாம்னு நினைத்திருந்தோம்..." எனக் கூறிக்கொண்டே கராத்தே போட்டிகளில் தேஜ்வீர் வென்றபோது எடுத்த சில புகைப்படங்களை நம்மிடம் காட்டினார்.   

 

அவர் காட்டிய புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, அருகே படுத்திருந்த தேஜ்வீரின் தற்போதைய நிலையைப் பார்த்தபோது இந்தமுறை நாம் எமோஷனல் ஆகிவிட்டோம். நம்மை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்காக இந்த முறை ஷர்மிளா பேசத் தொடங்கினார். "ஸ்கூல்ல யாருக்காது பர்த்டேனு சாக்லேட் கொடுத்தாக்கூட வீட்டுல கொண்டுவந்து எனக்கு, அவங்க அப்பாக்கு, அவன் அண்ணனுக்கு என மூனு பேருக்கும் குடுத்துட்டுதான் சாப்பிடுவான் சார்..." என அவர் கூறிக்கொண்டு இருக்கையிலேயே மீண்டும் வாந்தி வருகிறது என சைகை காட்டி அழைத்த தேஜ்வீர், இந்த முறை நீண்ட நேரம் வாந்தி எடுத்தான்.

 

அவனை ஆசுவாசப்படுத்திவிட்டு வந்து, "அடிக்கடி வாந்திதான் எடுத்துக்கிட்டே இருக்கான் சார். தொண்டையெல்லாம் இன்ஃபெக்சன் ஆகிருச்சு. கடைசி ரெண்டு நாளா பேசக்கூட முடியல. எல்லாத்தையும் சைகைலதான் சொல்றான். கீமோ பண்ணதுனால இந்த வீக்ல ஹெல்த் கண்டிஷன் இன்னும் கொஞ்சம் டவுன் ஆகும்னு சொல்லிருக்காங்க. ஏற்கனவே டவுன்லதான் இருக்கு... இன்னும் என்ன டவுன்னு எனக்குப் புரியல..." எனக் கூறிய ஷர்மிளாவின் குரலில் தாங்கொணாத் துயரமும் வேதனையும் நிரம்பியிருந்தன. 

 

காலம் செய்யும் கோலம் இத்தனை அபத்தமானதாகவா இருக்க வேண்டும்? வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டால் இளம் வயதில் பாதிக்கப்பட்ட மெஸ்ஸியும், சிறு வயதிலேயே இதய நோயால் பாதிக்கப்பட்ட ரொனால்டோவும் விளையாட்டு உலகத்தை இன்று ஆள்வதுபோல, சிறுவன் தேஜ்வீரும் நோயிலிருந்து மீண்டு வந்து சாதனைகள் பல படைக்க பிரார்த்திப்போம்.

 

சிறுவன் தேஜ்வீரின் சிகிச்சைக்கு உதவ விரும்பினால் கீழ்கண்ட லிங்க்கில் சென்று நிதியளிக்கலாம். அல்லது கீழே குறிப்பிட்டுள்ள அவரது வங்கிக்கணக்கிலேயே நேரடியாக பணம் செலுத்தி உதவலாம். நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சிறுவன் தேஜ்வீரின் உடலில் உள்ள புற்றுசெல்களுக்கு எதிரான ஆயுதமாக செயல்படும்.

 

மேலதிக தகவல்களுக்கு, ஷர்மிளாவின் கணவரை தொடர்பு கொள்க - 9840880903

 

GPAY number- 9840880906.

Account number: 90928353883245
Account name: Ms Tejveer
IFSC code: IDFB0020101

Fundraiser link: https://www.impactguru.com/fundraiser/help-ms-tejveer-apl

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

ஷர்மிளா தற்கொலை விவகாரம்; ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Sharmila incident RdO Order for investigation

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்த காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது எனவும், உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.