Skip to main content

செய்யூர் சசிகலா மரண வழக்கை எஸ்.பி. கண்காணிப்பில் நடத்த வேண்டும்! –உயர் நீதிமன்றம் உத்தரவு!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
 Seyyur Sasikala case- High Court order!

 

 

தற்கொலை செய்ததாக கூறப்படும், செய்யூர் சசிகலா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. கண்காணிப்பில் நடத்த  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்த சசிகலா என்ற 24 வயது இளம்பெண் ஜூன் 24-ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி தேவேந்திரன் அளித்த தகவலின் அடிப்படையில், செய்யூர் காவல் நிலையத்தினர் உடலைக் கைப்பற்றினர்.

 

பிரேத பரிசோதனை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் முடிந்து, சசிகாலாவின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட நிலையில்,  தனது தங்கையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக,  சசிகலாவின் சகோதரர் அருண்பாபு புகார் அளித்தார். அதில், தேவேந்திரன் மற்றும் அவரது சகோதரர் புருஷோத்தமன் ஆகிய இருவரும்தான்,  தங்கையைக் கொலை செய்துவிட்டு நாடகமாடியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

 

தங்கை சசிகலா குளிக்கும்போது வீடியோ எடுத்துவைத்து, அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி,  இருவரும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக, சசிகலாவின் தோழிகள் அளித்த தகவலின் அடிப்படையில், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதற்கிடையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக தேவேந்திரன், புருஷோத்தமன் ஆகியோர் திமுக-வில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர், புருஷோத்தமன் கைது செய்யப்பட்ட நிலையில், தேவேந்திரன் சரணடைந்தார். இந்நிலையில், மகள் சசிகலாவின் மரணம் குறித்து, செய்யூர் காவல் நிலையம் விசாரித்துவரும் வழக்கை, சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கோரி, அவரது தயார் கே.சந்திரா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

அவரது மனுவில், சசிகலா மரணம் தொடர்பான வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக மட்டுமே புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு செய்யூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். விசாரணை முறையாக நடைபெறவில்லை.  இருவர் மீதும், தன் மகளை நிர்வாண வீடியோ எடுத்தது, பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்தது, மரணம் விளைவித்தது போன்ற பிரிவுகளிலோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்பு சட்டத்திலோ வழக்கு பதிவு செய்யாமல் விசாரணை நடத்துவது, இருவரையும் வழக்கிலிருந்து தப்பிக்க வைக்கும் காவல்துறையின் முயற்சி ஆகும்.  இருவரையும் குண்டர் சட்டத்தில்  அடைப்பதற்கும் போதிய முகாந்திரம் இருப்பதாக,  மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், தொடக்கத்தில் இந்த வழக்கு தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. பின்னர்,  தற்கொலைக்கு தூண்டியதாக புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து,  தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு,  தற்கொலை செய்து கொண்ட சசிகலாவின் உறவினர்கள் சிலர் முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இதனைப் பதிவு செய்த நீதிபதி,  சசிகலாவின் உறவினர்களான சுமன், அரவிந்த் மற்றும் சுரேஷ் ஆகியோர், செய்யூர் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும்,  செய்யூர் காவல் நிலையம் தொடர்ந்து விசாரணையை மேற்கொள்ள அனுமதியளித்த நீதிபதி,   சாட்சிகள், ஆவணங்கள் அடிப்படையில் விசாரணையை நடத்தி 12 வாரத்தில் இறுதி விசாரணை அறிக்கையை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், இந்த வழக்கின் முழு விசாரணையும், செங்கல்பட்டு மாவட்ட எஸ். பி. கண்காணிப்பில் நடத்தவேண்டும் எனவும் குறிப்பிட்டு,  இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

பார் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழப்பு; 12 பேர் மீது வழக்கு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Bar roof collapses, 3 lost live Case against 12 people

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமாக இயங்கி வந்த பாரின் முதல் தளத்தின் மேற்கூரை நேற்று இரவு திடீரென யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இதில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுப் பிரேதப் பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த விபத்து குறித்து காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக் கொண்டுள்ளதாகத் தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள அபிராமபுரம் போலீசார், பாரின் மேலாளர் சதீஷ் உட்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.