Skip to main content

வி.ஜே சித்ரா மரணம்! தந்தை பரபரப்பு புகார்...!!

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

Serial actress chitra passes away in hotel near by poonamalli

 

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமா, சீரியல் நடிகர் நடிகைகளின் மர்ம மரணங்களின் முடிச்சு எப்போதும் மர்மமாகவே தொடர்கிறது. அந்த வரிசையில் தற்போது பிரபல சீரியல் நடிகையின் மரணமும் தொடர்கின்றது. சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த டி.வி சீரியல் நடிகையான சித்ரா, ஆரம்பத்தில் வி.ஜே சித்து என்ற பெயரில் தனியார் டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளராகப் பிரபலமானவர். 

 

சமீபத்தில் வெற்றிகரமாக மக்களின் அபிமானமான டி.வி சீரியல் தொடராக வெளிவந்துகொண்டிருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சிக்குச் சென்றவர் நடிகை சித்ரா. கடந்த மார்ச் மாதம் பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியைச் சேர்ந்த தொழில் அதிபரான ஹேம்நாத் என்பவருடன் திருமணம் நிச்சியம் முடிக்கப்பட்டு இருவரும் சேர்ந்து வலம் வந்தனர். 

 

கரோனா தொற்று தடுப்பின் காரணத்தால் திருமண தேதி தள்ளிச் சென்றது. இந்தநிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டு அதை வெளியிடாமல், சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த இரண்டு மாதமாக அரசின் தளர்வுகளால் மீண்டும் டி.வி சீரியல் படபிடிப்புகள் துவங்கப்பட்டது. சித்ரா நடித்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னதிரை சீரியல் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதமாக சென்னையை அடுத்த ஈ.வி.பி ஃபிலீம் சிட்டியில் நடத்தப்பட்டு வந்தது. 

 

சித்ராவும் எதிர்கால கணவரான ஹேம்நாத்தும் கடந்த ஒரு மாதமாக அதே ஈ.வி.பி ஃபிலீம் சிட்டியில் உள்ள ஓட்டலில் தங்கி வந்துள்ளனர். படிபிடிப்பு நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரத்தில் வெளியில் சுற்றி வந்துள்ளனர். இந்தநிலையில் டிசம்பர் 9ஆம் தேதி அதிகாலை 2:15 மணியளவில் படப்பிடிப்பு முடித்து, தனது வருங்கால கணவர் ஹேம்நாத்துடன் ஓட்டல் அறைக்குச் சென்ற சித்ரா, ஓட்டல் அறைக்குள் மர்மமான முறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. ஓட்டல் நிர்வாகம் கொடுத்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீஸார், சித்ராவின் பிரேதத்தை கைபற்றி உடல்கூர் ஆய்வுக்காகச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் ஹேம்நாத்திற்கும் சித்ராவுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே திருமணம் முடிந்ததாகத் தெரியவந்ததால், சட்டப்படி திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பிரீத்தி பிரபா விசாரிப்பார் என்று கூறப்படுகின்றது.

 

இந்நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ் மற்றும் உறவினர்கள் நசரத்பேட்டை காவல்நிலையத்தில், சித்ராவின் மரணத்திற்கு யார் காரணம் என கண்டுபிடிக்க வேண்டுமென புகார் கொடுத்துள்ளனர். 

 

இது போன்ற நடிகைகளின் மர்ம மரணத்தின்  மர்ம முடிச்சுகள் அவிழாமல் தொடர் கதையாகின்றது. இரு ஆண்டுக்கு முன் போரூர் லட்சுமிநகரில் சர்பனா என்ற டி.வி நடிகை தன் வீட்டில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். இதுவரை அந்த வழக்கிலும் மர்மம் விலகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்