Skip to main content

“ரிஸ்க் எடுத்தேன்... ரஸ்க் ஆகிவிட்டேன்” - செல்லூர் ராஜு கலகலப்பு

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

Sellur Raju  fun says I took a risk... I became a rusk

 

மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்றும் முன்தினம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, “நாம் அனைவரும் பிறப்பதற்கு முன்பாக இந்த நாட்டில் தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு, தெருவில் நடந்தால் தீட்டு என்ற நிலை தான் இங்கு இருந்தது. அந்த நிலையை தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் போராடி மாற்றினார்கள். மேடையில் பேசி பேசி வளர்ந்த கட்சி தான் திமுக. ஆனால், இன்றைக்கு அண்ணாவை பற்றியும், பெரியாரை பற்றியும் ஒருவர் தவறாக பேசுகிறார். அதற்கு திமுக சார்பில் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அண்ணாவை பற்றி இழிவாக பேசுபவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தால் அமலாக்கத்துறை வந்துவிடும் என்ற பயத்தில் தி.மு.க.வினர் இருக்கிறார்கள். 

 

கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாகத் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு சம்பவத்தின் மூலம் நான் உலகம் முழுவதும் பிரபலமாகிட்டேன். இன்றைய சூழ்நிலையில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ‘அரசியல் விஞ்ஞானி’ என்று என்னை கேலி கிண்டல் செய்கின்றனர். அந்த கதையை இப்போது சொல்ல விரும்புகிறேன்.

 

மதுரை மாவட்டத்தில் அப்போது வறட்சி நிலவியதால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வறட்சி நிவாரண கூட்டம் அப்போதைய ஆட்சியர் வீரராகராவ் முன்னிலையில் நடைபெற்றது. அந்த சமயம் சித்திரை திருவிழா காலம் என்பதால் மதுரை வைகை ஆற்றில் 15 லட்சம் மக்கள் கூடும் நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகளிடம் ஆலோசித்தேன். 

 

அப்போது வைகை அணையில் தண்ணீர் குறைவாக இருந்தது. இருக்கும் தண்ணீரை வைத்து 4 அல்லது 5 நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீரை வழங்க முடியும். அதற்குள் மழை வந்துவிடும், பிறகு நிலைமையை சமாளிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், எதிர்பார்த்த மழை வரவில்லை. இந்த நிலையில் தான் 4 நாள்கள் கழித்து ஆட்சியர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டார். அதில் அவர், ‘நாம் வைகை ஆற்றுக்கு செல்ல வேண்டும். அங்கே முதன்மை பொறியாளர் ஒரு திட்டத்தை வைத்துள்ளார். அதன்மூலம் நீர் ஆவியாவதை தடுக்கலாம். அதன் மூலம் வைகை அணையில் நீரை ஓரளவு சேமிக்கலாம்’ என்று கூறினார்.  

 

நானும் கட்சி நிர்வாகிகளுடன் வைகை அணைக்கு சென்றேன். அங்கு, ஏற்கனவே தெர்மாகோல் அட்டைகளை வரிசையாக அடுக்கி வைத்து தயாராக இருந்தனர். அப்போது நானும், அங்கு வைக்கப்பட்டிருந்த தெர்மாகோல் அட்டைகளை எடுத்து வைகை அணை தண்ணீரில் வைத்தேன். வைத்தது தான் தாமதம். அந்த நேரத்தில் வீசிய காற்றின் வேகத்தில் தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் பறந்தன. இந்த செய்தி பரவி உலகம் முழுவதும் என்னை ‘அரசியல் விஞ்ஞானி’ என்று இணையவாசிகளால் இப்போது வரை கலாய்க்கப்பட்டு வருகிறேன். மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ரிஸ்க் எடுத்தேன். ஆனால் இப்படி ரஸ்க் ஆகிவிட்டேன்” என்று கூறினார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி! - அண்ணாமலை சொல்வது என்ன? 

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவமும், அவரிடத்தில் இருந்து லேப்டாப் மற்றும் ஹார்டு டிஸ்க்குகள் கைப்பற்றியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வந்தவர் சுரேஷ் பாபு. கடந்த 2018 ஆம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சுரேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு மதுரை அமலாக்கத்துறைக்கு சென்றது. மதுரை அமலாக்கத்துறைக்கு பதவி உயர்வு பெற்று வந்த அங்கித் திவாரி என்ற அதிகாரி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மருத்துவர் சுரேஷ்பாபுவை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, வருமானத்திற்கு அதிகமாக நீங்கள் சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின் விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டுமானால் மூன்று கோடி ரூபாய்  லஞ்சம் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். 

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

இதில் பேரம் நடந்து பிறகு 51 லட்சம் ரூபாய் லஞ்சமாக தருவதில் வந்து முடிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முதல் கட்டமாக மதுரை - நத்தம் சாலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி 20 லட்சம் ரூபாய் முதல் தவணையை லஞ்சமாக கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து மீதி உள்ள தொகையைக் கேட்டுள்ளார் அங்கித் திவாரி.

 

மீண்டும் மருத்துவர் சுரேஷ் பாபுவை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதனையடுத்து நேற்று திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் துணையோடு ரசாயனம் தடவிய 20 லட்சம் ரூபாயை பேக்கில் வைத்து இன்று காலை திண்டுக்கல் - மதுரை சாலையில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு கொடுக்கும் பொழுது கையும் களவுமாக அமலாக்கத்துறை அதிகாரி திவாரி பிடிபட்டார். இதன் பிறகு அவரிடத்தில் 15 மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல், அவர் பணியாற்றி வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்திலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 13 மணி நேரமாக சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

Annamalai comment about ED officer arrested in tamilnadu

 

இந்நிலையில், இன்று காலை தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் குறித்துப் பேசினார். அவர் தெரிவித்ததாவது, “இதை அரசியலாக பார்ப்பதைவிட, ஒரு நபர் லஞ்சம் வாங்க முற்பட்டு, லஞ்சம் வாங்கியுள்ளார். அவரை கைது செய்திருக்கிறார்கள் என்றுதான் நான் பார்க்கிறேன். இது மிகவும் புரஃபஷ்னலா அணுகவேண்டிய விஷயம். இதற்காக மொத்த அமலாக்கத்துறை மீதும் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை. அமலாக்கத்துறை மீது தவறு இல்லை. மனிதர்கள் செய்யும் தவறுக்கு அமலாக்கத்துறை மீது தவறு சொல்ல முடியாது. தவறு செய்த அமலாக்கத்துறை அதிகாரி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். லஞ்சம் வாங்குபவர்களை கைது செய்வதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

 

இது அரசியல்வாதிகளுக்கு புரியாது. அவர்களுக்கு கொஞ்சம் மெச்சூரிட்டி குறைவு. அதுவும் தமிழ்நாட்டில் மெச்சூரிட்டி குறைவான அரசியல்வாதிகளே இருக்கிறார்கள். சம்மந்தமே இல்லாமல் ஒரு கட்சியையும், கட்சியின் தலைவரையும் தொடர்புபடுத்தி பேசும் அளவிற்கு மெச்சூரிட்டி குறைவான தமிழ்நாடு அரசியல்வாதிகளை வைத்தே தமிழ்நாடு வாழ்ந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

கே.டி.  ராகவனுக்கு பொறுப்பு! - அண்ணாமலையின் அதிரடி முடிவு! 

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

K.T. Raghavan! The action of Annamalai!

 

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியா முழுக்க இருக்கும் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளைத் துவங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க.வுக்கு எதிரான 35க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி எனும் மெகா கூட்டணியை அமைத்துள்ளன. அதேவேளையில், பா.ஜ.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு அடுத்து பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.க. சமீபத்தில் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியே வந்தது. 

 

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்டதும் இது ஒரு தேர்தல் நாடகம் விரைவில் அவர்கள் ஒன்றிணைவார்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தெரிவித்திருந்தனர். ஆனால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது என உறுதியாகத் தெரிவித்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதியில் 9 தொகுதிகளைக் கைப்பற்ற பா.ஜ.க. தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களே பேசி வந்தனர். 

 

அதற்கான பணிகளும் தமிழ்நாடு பா.ஜ.க.வில் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிட திட்டமிட்டிருக்கிறதோ என சிந்திக்கும் வகையில், 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

 

K.T. Raghavan! The action of Annamalai!

 

அதன்படி, தென்காசி தொகுதிக்கு பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஈரோடு தொகுதிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக கே.டி. ராகவன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு எஸ்.ஜி. சூர்யா, நாமக்கல் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, திருவள்ளூர் தொகுதிக்கு என்.எல். நாகராஜன், தென்சென்னைக்கு பாஸ்கர், அரக்கோணம் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, சேலத்துக்கு தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம், மத்திய சென்னைக்கு ஜி. ராதாகிருஷ்ணன், தர்மபுரிக்கு முனிராஜ், வட சென்னைக்கு பெப்சி சிவகுமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு பாஜக மாநில துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் ஆகியோர் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்கள் அனைவரும் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என பா.ஜ.க. மாநிலத் தலைமை அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்