Skip to main content

இரண்டே வாரத்தில் எஸ்.பி. இடமாற்றம்- இராணிப்பேட்டையில் பரபரப்பு!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

In the second week S.P. Relocation- Excitement at Ranipettai!

 

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து 2019- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது இராணிப்பேட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தின் முதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மயில்வாகனம் நியமிக்கப்பட்டார். சரியாக ஓராண்டுக் காலம் பணியாற்றினார். 2021- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு மயில்வாகனம் மாற்றப்பட்டு சிவக்குமார் நியமிக்கப்பட்டார்.

 

தேர்தல் முடிவுகள் வந்தது, புதியதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகளை இடமாற்றம் செய்தனர். அப்போது காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்தபோது இராணிப்பேட்டை எஸ்.பி.யாக இருந்த சிவக்குமார் மாற்றப்பட்டு புதிய எஸ்.பி.யாக மீனா நியமிக்கப்பட்டார். அவரும் சில வாரங்களில் மாற்றப்பட்டு தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்ஜய் நியமிக்கப்பட்டார்.

 

இவர் நியமிக்கப்பட்டு முழுவதாக இரண்டு வாரங்கள் கூட முடியவில்லை. அதாவது ஆகஸ்ட் 2- ஆம் தேதி தான் பதவியேற்றார். தற்போது இவர் மாற்றப்பட்டது ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

ஆகஸ்ட் 16- ஆம் தேதி ஏழு காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ஒருவர். தேஷ்முக் சேகர் சஞ்ஜய், காவல்துறை சிறப்பு அதிரடிப்படையின் 6- வது பட்டாலியன் (மதுரை) க்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய ராணிப்பேட்டை எஸ்.பி.யாக தீபாசத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இரயில்வே துறையின் கண்காணிப்பாளராகச் சென்னையில் பணியாற்றி வந்தவர்.

 

பொதுவாக உயர் அதிகாரிகள் இடமாற்றம் என்பது இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அரசு விதிப்படி ஒரு அரசு அதிகாரி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரு இடத்தில் பணியாற்றக் கூடாது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அமைச்சரவை மாற்றம், உயர் அதிகாரிகள் மாற்றம் என்பது அடிக்கடி நடக்கும், எப்போது நடக்கும், எதனால் நடக்கிறது என யூகிக்கவே முடியாது.

 

அதேபோல் இப்போதும் நடக்கிறதா என்கிற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. ஒருமாவட்டத்தின் எஸ்.பி.யாக பொறுப்பேற்று இரண்டு வாரங்கள் கூட முடியாத நிலையில் அவரை மாற்றியது ஏன், ஆட்சியாளர்களுடன் மோதலா? அதிகாரிகளுடன் மோதலா? அல்லது விரும்பிய வேறு பதவி வாங்கிச்செல்கிறாறா என்கிற பட்டிமன்றம் மக்களிடம் நடக்கிறது.

 

அவர் மாற்றலுக்கான உண்மையான காரணம், "தஞ்சாவூரில் எஸ்.பி.யாக இருந்தபோது, ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்பட்ட பா.ஜ.க. பிரமுகர்கள் மீது பலரும் தந்த மோசடி புகாரை விசாரிக்காமல் இருக்க பல லட்ச ரூபாய் பணம் வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் அங்கிருந்து இராணிப்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது ஹெலிகாப்டர் சகோதரர்கள் கைது செய்யப்பட்டபோது தந்த வாக்குமூலத்தில் இரண்டு முறை லஞ்சம் தந்ததாக அவர்கள் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனாலேயே உயரதிகாரிகள் அவரை இடமாற்றம் செய்யப் பரிந்துரை செய்து தற்போது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டுள்ளார்" என்கிறார்கள் விவரம் அறிந்தோர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sharmila handed over to Praveen parent

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையான் பேட்டையைச் சேர்ந்த ஷர்மிளா (வயது 22) என்ற பெண்ணைக் கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரவீன் - சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது. இந்தக் காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் இவர்கள் இருவரும் வசித்து வந்தனர்.

இத்தகைய சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனையடுத்து காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால், ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு (22.04.2024) உயிரிழந்தார். மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுதோடு கொலைக்கு காரணமான தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக கோட்டாட்சியர் (RDO - ஆர்.டி.ஓ.) விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஷர்மிளாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் இன்று (25.04.2024) வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் நேரில் விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து ஷர்மிளா உடலுக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று நிறைவடைந்த நிலையில் ஷர்மிளாவின் உடல் பிரவீனின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.