Skip to main content

பேசியது ஸ்ரீமதியா...?-பள்ளி மாணவி விளக்கத்தால் பரபரப்பு!

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

schoolgirl dissatisfaction complaint

 

கடந்த ஜூலை 13- ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படுகிற நிலையில் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த வருகின்றனர். அதேசமயம் சம்மந்தப்பட்ட பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, 307 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பள்ளி நிர்வாகிகள் 3 பேரும், பள்ளி ஆசிரியர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தீவிர விசாரணை நடந்து வருகிறது. மறுபுறம் காவல்துறை சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பள்ளியில் நடந்த கலவரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கலவரத்திற்கு காரணம் சமூகவலைத்தளங்களில் வெளியான தவறான தகவல்களே என கூறியுள்ள காவல்துறை, போலி செய்திகளை பரப்பிய சில யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட பல சமூகவலைதள பக்கங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

 

schoolgirl dissatisfaction complaint

 

இந்நிலையில் பள்ளி பேச்சு போட்டியில் அபாரமாக தமிழில் பேசும் வீடியோ ஒன்று உயிரிழந்த பள்ளி மாணவி பேசிய வீடியோ என தகவல்கள் பரப்பப்பட்ட நிலையில், போலியான தகவலை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். பள்ளி பேச்சு போட்டியில் அபாரமாக தமிழில் பேசும் வீடியோ ஒன்று பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது. 'இவ்வளவு தெளிவாக பேசும் மாணவி எப்படி தற்கொலை செய்துகொள்ள முடியும்' என தலைப்பிட்டு அந்த வீடியோவானது பகிரப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் 66 ஆயிரம் பேர் இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை அறியாமல் வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஆனால் அந்த வீடியோவில் பேசுவது கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி அல்ல, கோவையைச் சேர்ந்த வேறு பள்ளி மாணவி என்பது தெரியவந்துள்ளது.

 

கோவை மாணவி இது குறித்து தெரிவிக்கையில், ''மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பு ஏற்றுக்கொள்ளமுடியாதது. அவரது பிரிவை நினைத்து இன்று வரை நாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையை தவறா பயன்படுத்தி நான் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேசிய வீடியோக்களை அவர் பேசியதாக எடுத்து தவறாக பரப்பியுள்ளனர். நீங்கள் பல பெண் சாதனையாளர்களை, பெண் மேதைகளை உருவாக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இந்த சமூகத்தில் இன்னும் பல ஸ்ரீமதிகளை உருவாக்கி விடாதீர்கள் அதுவே போதும்'' என அதிருப்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வீடியோவை பரப்பியவர்கள் மீது கள்ளக்குறிச்சி கலவரம் குறித்து விசாரித்து வரும் போலீசார் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

எந்த சின்னத்திற்கு ஓட்டு போட்டேன் என சொன்ன பெண் அடித்து கொலை; 7 பேருக்கு வலை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

நேற்று தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் எந்த சின்னத்தில் வாக்களித்தேன் என வெளியே சொன்னதால் ஒரு பெண் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்திருக்கிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்துள்ளது பக்ரிமாணியம் கிராமம். அந்த பகுதியில் வசித்து வந்தவர் கோமதி. நேற்று நடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்ட ஒரு சின்னத்திற்கு வாக்களித்ததாக வெளியில் கூறியுள்ளார். இதனைக் கேட்ட அதே ஊரைச் சேர்ந்த அருள், பாண்டியன், அறிவுமணி, ரவிராஜா, கலைமணி, தர்மராஜ் ஆகியோர் அப்பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 'நீ ஏன் எங்கள் கட்சிக்கு வாக்களிக்கவில்லை' என கூறி ஏழு பேரும் ஒன்றாக சேர்ந்து கோமதியை பலமாக தாக்கியுள்ளனர்.

இதில் கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீமுஷ்ணம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் உடலைக்  கைப்பற்றி விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அவரது உடலை அனுப்பி வைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட ஏழு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இக்கொலைக்கு உடைந்தையாக இருந்ததாக அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.