Skip to main content

மாணவனின் டி.சி-ஐ வீசி எறிந்த பள்ளி; தலையிட்ட நக்கீரன்; அதிரடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்! 

Published on 02/07/2022 | Edited on 02/07/2022

 

A school that threw away a student's TC; Minister Anbil Mahesh took immediate action!
தரையில் வீசப்பட்ட மாற்றுச் சான்றிதழ்

 

திருச்சி மாவட்டம், முசிறியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் சாலப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏழு வயது மாணவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவன் தினமும் பள்ளி பேருந்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில், நேற்று அந்த மாணவன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது ஆசிரியர்கள் அந்த மாணவனை வகுப்புக்குள் அனுமதிக்காமல் வெளியில் அமரவைத்துவிட்டு, அவரின் பெற்றோரை பள்ளிக்கு அழைத்துள்ளனர். 

 

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம், ‘மாணவன் இன்னும் பேருந்து கட்டணம் செலுத்தாததால் பேருந்தில் ஏற்றமுடியாது’ என்று கூறியுள்ளனர். அப்போது, மாணவனின் பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பள்ளி நிர்வாகம், பெற்றோரை ஒருமையில் பேசியுள்ளது. அதன் பிறகு மாணவனின் மாற்றுச் சான்றிதழை தூக்கி வீசியுள்ளது. 

 

A school that threw away a student's TC; Minister Anbil Mahesh took immediate action!
கோப்புப் படம்

 

இந்தச் சம்பவம் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் நக்கீரன் விசாரணை நடத்தியது. அதன் பிறகு முழு விவரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் எடுத்து சென்றோம். விவரத்தை முழுமையாக கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிச்சயம் முழு விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் உடனடியாக திருச்சி மாவட்டப் பள்ளிக் கல்வி அதிகாரிக்கு (சி.இ.ஓ) இந்த விவகாரத்தைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அமைச்சரின் உத்தரவை அடுத்து சம்மந்தப்பட்ட பள்ளிக்கு திருச்சி மாவட்ட சி.இ.ஓ சென்று விசாரணை மேற்கொண்டு பள்ளி நிர்வாகத்தை எச்சரித்தார். மேலும், அந்த மாணவனின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கவும், மாணவனை பள்ளி வாகனத்தில் வர அனுமதிக்கவும், பெற்றோருக்கு வேறு வழியில் எந்தப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டார். 

 

A school that threw away a student's TC; Minister Anbil Mahesh took immediate action!
பள்ளி நிர்வாகம் அளித்த மன்னிப்பு கடிதம்

 

மாவட்ட சி.இ.ஓ.வின் உத்தரவை அடுத்து பள்ளி நிர்வாகம், ‘மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் மாற்றுச் சான்றிதழ் கொடுத்தது தவறு என்று ஒப்புக்கொண்டது. பள்ளி நிர்வாகம் மாணவனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இப்பள்ளியில் தொடர்ந்து பயில முழுமையாக சம்மதிக்கிறது. வழக்கம்போல் சாலப்பட்டிக்கு பள்ளி வாகனம் அனுப்பப்படும். 


மாணவனின் பெற்றோர் இனி எந்தவொரு இடையூறும் ஏற்படாமல் பள்ளி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்போம் என உறுதியளித்தனர்’ என்று தங்களது மன்னிப்பு அறிக்கையில் தெரிவித்தனர்.  

 

இதுகுறித்து மாணவனின் தாய் கலைச்செல்வி கூறுகையில் பள்ளி நிர்வாகம் தங்களை அழைத்து வருகின்ற திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் மாணவன் பள்ளிக்கு வரலாம் என்று உறுதியளித்துள்ளது என்று தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.