Skip to main content

‘ஆத்திரத்தில் மாணவர்கள்... பதைபதைத்த பெற்றோர்கள்’ - நெல்லையை கலங்கடித்த விபத்து!

Published on 18/12/2021 | Edited on 18/12/2021

 

school accident that made parents and students upset

 

நெல்லை டவுன் நெல்லையப்பர் சுவாமி பெருவழிச் சாலையில் அரசுப் பொருட்காட்சித் திடலுக்கு எதிரே உள்ளது தனியார் சி.எஸ்.ஐ அமைப்பின் அரசு உதவி பெறும் சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. நெல்லை வரலாற்றிலே 100 ஆண்டுகாலம் பாரம்பரியமுள்ள பழமையான முதல் தனியார் பள்ளி. ஆரம்ப வகுப்பு முதல் ப்ளஸ் 2 வரை வளர்ந்துவந்த இந்தப் பள்ளியில் நெல்லை மாநகர மற்றும் சுற்றுப் பகுதியிலுள்ள சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். பழமையைப் போன்று பள்ளியின் சில பகுதிகளில் புராதன கட்டடங்களும் உள்ளன. இந்தப் பள்ளியில் பயின்ற பல மாணவர்கள் அரசின் உயர் பதவிகளிலும், தனியார் துறையில் உயரதிகாரிகளாகவும் உள்ளனர்.

 

கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் ஈரமாகிப் பொதுமிப்போய் பிடிப்பற்று நின்றிருக்கிறது. இந்நிலையில், நேற்று (17.12.2021) காலை பள்ளி வழக்கம் போல் ஆரம்பித்தவுடன் உடற்பயிற்சி வகுப்பு தொடங்கியிருக்கிறது. அதேசமயம், காலை 10.50 மணி அளவில் பள்ளியில் இடைவேளை விட்ட நேரம். வழக்கம் போல் மாணவர்கள், பள்ளியின் பின்பக்கச் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள கழிவறைக்கு சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கிறார்கள். அந்தக் கழிப்பறையும் அதனை ஒட்டிய சுற்றுச்சுவரும் மழை காரணமாக ஈரம் பாய்ந்து பிடிப்பற்று சொதசொதவென நின்றிருக்கிறது. அந்த நேரம் மாணவர்களும் சிறுநீர் கழிக்க உள்ளே சென்றதும் பிடிப்பற்ற கழிவறைச் சுவர்கள் பெயர்ந்து மாணவர்களின் மீது விழுந்து அமுக்கியிருக்கிறது.

 

school accident that made parents and students upset

 

அது கண்டு பயந்து ஓலமிட்ட மாணவர்கள் பீதியில் அலறியிருக்கிறார்கள். இடிபாடுகளுக்கிடையே கதறிக்கொண்டிருந்த மாணவர்களை சக மாணவர்கள் அதனை அகற்றியவாறு காப்பாற்ற போராடிக்கொண்டிருந்தனர். இதில் 8 மாணவர்கள் சிக்கியுள்ளனர். இந்நிலையில், தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும் காவல்துறையினரும் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய மாணவர்களை மீட்டனர். இதில் பழவூரைச் சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் சுதீஷ் மற்றும் தச்சநல்லூரைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவன் விஸ்வரஞ்சன் ஆகிய இரண்டு மாணவர்களும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயமடைந்த மாணவர்களை சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், நரசிங்கநல்லூரைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் அன்பழகனின் உயிர் வழியிலேயே பிரிந்திருக்கிறது.

 

இந்நிலையில், விபத்து மற்றும் 3 மாணவர்கள் பலியானது குறித்து அறிந்த பள்ளி மாணவர்கள் ஆத்திரத்தில் கொதிப்பானார்கள். அதே சமயம் பள்ளிக்கு விடுமுறை அளிக்க, மொத்தப் பள்ளி மாணவர்களும் ஆக்ரோஷத்தில் திரண்டிருக்கிறார்கள். பின்னர் அவிழ்த்துவிட்ட நெல்லி மூட்டை போன்று மாணவர்களின் கூட்டம் சிதறியது. ஆவேசத்தில் மாணவர்கள் பள்ளியிலுள்ள சில வாகனங்களைச் சேதப்படுத்தினர். பூந்தொட்டிகள் தூக்கி வீசப்பட்டன. தகவலறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் அலறியடித்துக்கொண்டு பள்ளிக்கு ஒடிவந்தனர். பள்ளியின் சாலையே பதைபதைப்பிலும் பதற்றச் சூழலிலும் இருந்தது. மாணவர்களும் பெற்றோர்களும் பள்ளிச் சாலையின் முன்னே மறியலில் ஈடுபட்டனர்.

 

school accident that made parents and students upset
           அன்பழகன்                                சதீஷ்                              விஸ்வரஞ்சன்

 

மீனவர்கள் குறைதீர் கூட்டத்திலிருந்த மாவட்டக் கலெக்டர் விஷ்ணு, தகவலறிந்து பள்ளிக்கு விரைந்தார். அதே சமயம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணனும் சம்பவ இடத்திற்கு வர, மீட்பு பணிகளை விரைவுபடுத்தியவர்கள் சம்பவ இடத்தை ஆய்வுசெய்தனர். சிகிச்சையிலிருந்த மாணவர்களைச் சந்தித்த கலெக்டர் விஷ்ணு அவர்களுக்கு ஆறுதல் சொன்னார். அங்கிருந்த மாணவர்களிடம் நாம் பேசினோம். அப்போது அவர்கள் கூறியதாவது, “மழையில நனைஞ்ச சுவரு. நாங்க அந்தச் சுவரத் தொட்டாலே அது ஆடும். அதப் பல தடவ பள்ளி ஆசிரியர், தலைமைலயும் சொன்னோம். ஆனா அவுக கவனிச்ச மாதிரி தெரியல. அப்புறம், பள்ளி இடைவேளை நேரத்தில் பி.டி ஆசிரியர் சுவர் பக்கம் நின்னுக்கிட்டு அந்தப் பக்கமா மாணவர்களைப் போகவிடாம வேற பக்கம் போவச் சொல்றது வழக்கமாயிருச்சி.

 

இன்னக்கி அத மாதிரி பி.டி. ஆசிரியர் நின்னாரான்னு தெரியல. ஆனா இடைவேளைல மாணவங்க கொஞ்சப் பேரு மொத்தமா உள்ள போனப்ப பெயர்த்து விழுந்து அமுக்கிடுச்சி. நாங்கதாம் பதறிப் போயி இடிபாடுகள அகத்துனோம்” என்கிறார்கள் கண்ணீரும் கம்பலையுமாய். இதனிடையே, பள்ளியின் தலைமையாசிரியையான பெர்சிஷ் ஞானசெல்வியை விசாரணைக்காகப் போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். சஞ்சய்,  அபுபக்கர், அப்துல்லா, இசக்கிபிரகாஷ், பிரவீன் உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் சிகிச்சையில் இருக்கின்றனர்.

 

dsgsg

 

தவிர பள்ளியின் சுற்றுச்சுவர் சரியில்லை. குறிப்பாக, கழிவறைப் பக்கம் மோசமாயிருக்கு என்று ஏற்கனவே மாணவன் ஒருவன் பள்ளிக்குப் பெட்டிஷனும் அனுப்பியுள்ளாராம். அதுவும் கண்டுகொள்ளப்படவில்லையாம். 2004இல் கட்டப்பட்ட இந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் சரியான முறையான அடித்தளமில்லாமல் கட்டப்பட்டதுதான் விபத்திற்குக் காரணம் என்றும், பள்ளியின் சில கட்டடங்கள் அப்ரூவல் வாங்காமல் கட்டப்பட்டுள்ளது. அவை பள்ளி நிர்வாகம் மற்றும் அரசியல் புள்ளிகளின் செல்வாக்கால் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றனர். பள்ளி நிர்வாகத்தின் சர்வ அலட்சியம் மூன்று விலை மதிக்க முடியாத மாணவர்களின் உயிரைக் காவு வாங்கியிருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு; உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Case against Nayanar Nagendran; Trial in the High Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். அதில் 7 நாள்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த சம்மன் அனுப்பப்பட்டது. தாம்பரம் காவல் நிலைய காவலர் சுடலைமுத்து மூலம் நயினார் நாகேந்திரனின் மைத்துனர் துரையிடம் சம்மன் வழங்கப்பட்டது. மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது. முதல் தகவல் அறிக்கையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கைப்பற்றப்பட்ட பணம் தனது பணம் இல்லை என நயினார் நாகேந்திரன் மறுத்த நிலையில், அவரது பணம் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

Case against Nayanar Nagendran; Trial in the High Court

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் இருந்து போட்டியிட தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இந்த முறையீட்டை தலைமை நீதிபதி அமர்வு நாளை (18.04.2024) விசாரிக்கிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.