Skip to main content

சத்தியமங்கலத்தில் தொடங்கிய 'காட்டுக் கொள்ளை' 

Published on 30/07/2020 | Edited on 30/07/2020

 

sathyamangalam forest

 

ஒரு காலத்தில் சத்தியமங்கலம் காடு என்றால் அது  'வீரப்பன் காடு' என அழைக்கப்பட்டது. வீரப்பன் வாழ்வியல் காலம் இருந்தவரை காட்டுக்குள் விலங்குகள், மற்றும் இயற்கை கொள்ளை என்பது முழுவதுமாக தடுக்கப்பட்டது. ஆனால் இப்போது வனப்பகுதியில் ஆங்காங்கே கொள்ளை சம்பவங்கள் நடைபெற தொடங்கி விட்டது என்று வனத்துறையினரே கூறுகிறார்கள்.

ஈரோடு மாவட்டம் தூக்கநாய்க்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் யானைகள், காட்டெருமை, சிறுத்தை, புலிகள் என ஏராளமான வனவிலங்குகள் உள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பின்னர் வெளி ஆட்கள் வனப்பகுதிக்குள் செல்வது முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தூக்கநாய்க்கன்பாளையம் வனப்பகுதிகளில் அடிக்கடி யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்குத் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து கணக்கம்பாளையம் பிரிவில் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையில் பாரஸ்டர் ஆறுமுகம், கார்டுகள் பாலமுருகன், சுரேஷ், பழனிச்சாமி ஆகியோர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

 

sathyamangalam forest

 

அப்போது அவ்வழியாக இரண்டு  இரு சக்கர வாகனங்களில் வந்த நான்கு பேரை பிடித்து அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் இரண்டு தந்தங்கள் இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தொட்டகோம்பை மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழனிச்சாமி, அந்தியூர் பூனாட்சியைச் சேர்ந்த அங்கப்பன், ஆண்டவன், கோவிந்தராஜன் என்பதும், அந்த வனப்பகுதிக்குள் வயது முதிர்ந்த யானை ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்த பழனிச்சாமி அவரது நண்பர்களுடன் யானை தந்தங்களை வெட்டி எடுத்து விற்பனைக்காக டூவீலரில் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நான்கு பேரையும் வனத்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 அடி நீளமுள்ள இரண்டு யானை தந்தங்கள், மற்றும் அவர்களின் இரண்டு டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர். 

அடுத்த சம்பவமாக ஈரோடு மாவட்டம் அந்தியூரையடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதி தட்டக்கரையில் வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை வனத்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பிச் செல்ல முற்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை வனத்துறையினர் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் துர்சனாம்பாளையத்தைச் சேர்ந்த சிக்கணன், வெள்ளிமலைப் பகுதியைச் சேர்ந்த வீரபத்தரன் என்பதும், இவர்கள் வனப்பகுதியில் இருந்து சந்தன மரத்தை வெட்டி கர்நாடகா மாநிலத்திற்குக் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் இரண்டு பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த 5கிலோ சந்தன கட்டையைப் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவங்கள் ஒருபுறமிருக்க வனத்துறையினர் மீதே மலை மக்கள் வேறுவிதமாக குற்றம்சாட்டுகிறார்கள். ''இந்தக் காட்டுக்குள் அரசியல்வாதிகள், பெரும் செல்வந்தர்கள் பலருக்கும் காடு, தோட்டம் மட்டுமல்ல தங்கும் விடுதிகளும் உள்ளது. இவர்களுக்கு வனத்துறையினர் வேண்டிய எல்லா வசதிகளும் செய்கிறார்கள். சந்தன மரம் மட்டுமல்லாமல் தேக்கு, ஈட்டி போன்ற உயர்ரக மரங்கள் வனத்துறை உதவியுடன் வெட்டப்பட்டு கடத்தப்படுகிறது. யானை தந்தம், புலிகள், சிறுத்தைகளின் பல் மற்றும் நகங்களும் விற்பனைக்கு கொண்டு சென்று விடுகிறார்கள். இவர்களுக்கு ஒத்துழைக்காத மலை வாசிகள் மீது பொய் வழக்குப் போடுகிறார்கள்" என்கிறார்கள். எது எப்படியோ வீரப்பன் இல்லாத தைரியத்தில் 'காட்டுக் கொள்ளை' தொடங்கி விட்டது என அப்பகுதி மக்கள் முணுமுணுக்கிறார்கள்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது.