Skip to main content

தொடரும் சாத்தான்குளம் கொடூரம்! போலீசார் விசாரணையில் தாக்கப்பட்ட வாலிபர் சாவு! உறவினர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை! 

Published on 26/07/2020 | Edited on 26/07/2020
sathankulam

 

சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரனை என்ற பெயரில் கொடூரமாகத் தாக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நேரத்தில் இருவரும் மரணமடைந்தனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டியினர் விசாரித்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன் ரகுகணேஷ் உள்ளிட்ட 10 பேர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்தனர். பிறகு அந்த வழக்கு சி.பி.ஐ.யின் விசாரணைக்கு மாற்றப்பட்டு விசாரணையிலிருக்கிறது.

 

இதனிடையே அடுத்த பயங்கரமாக சாத்தான்குளத்திற்குட்பட்ட பேய்க்குளத்தின் துரை என்பவரை ஒரு வழக்கு சம்பந்தமாகக் கைது செய்து வந்த போலீசார் அவர் இல்லாததால் அவரது தம்பியான மகேந்திரனை சாத்தான்குளம் காவல்நிலைய எஸ்.ஐ.யான ரகுகணேஷ் மற்றும் போலீசார் அதிகாலை 2 மணியளவில் பிடித்துச் சென்றனர். காவல் நிலையத்தில் விசாரணை என்ற வகையில் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார் மகேந்திரன். 

 

பின்னர் துரை ஆஜரானதையடுத்து மகேந்திரன் விடுக்கப்பட்டார். எஸ்.ஐ.ரகுகணேஷ் உள்ளிட்ட போலீசாரால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த  மகேந்திரன், கடந்த ஜூன் 11ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு 13ம் தேதியன்று உயிரிழந்தார். இறப்பதற்கு முன் மகேந்திரன் மருத்துவமனையில் தான், தாக்கப்பட்டது குறித்து வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம்.

 

இதனிடையே மகேந்திரனின் தாயார் வடிவு அம்மாள், தன் மகன் எஸ்.ஐ. ரகுகணேஷ் உள்ளிட்ட போலீசாரால் தாக்கப்பட்டதால் மரணமடைந்தார். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் சி.பி.சி.ஐ.டியின் விசாரணைக்கு உத்தரவிட்டது.

 

அதனடிப்படையில் சி.பி.சி.ஐ.டி.யின் டி.எஸ்.பி. அனில்குமார் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து வடிவு அம்மாளிடம் விசாரணை நடத்தினர். அதன் பின் மகேந்திரனின் சகோதரி சந்தனமாரி, சகோதரர் துரையிடம் துருவித்துருவி விசாரித்தார்.

 

பேய்க்குளத்திலுள்ள வருவாய் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு இவர்களிடம் விசாரித்து முடித்த சி.பி.சி.ஐ.டி.யின் இன்ஸ்பெக்டர் சபீதா, பின்பு மகேந்திரனின் உறவினர்களான இசக்கியம்மாள் பெருமாள், கனகவல்லி பார்வதி உள்ளிட்டோர்களிடமும் விசாரணை நடத்தினார்.

 

மேலும் மகேந்திரனைப் போலீஸ் அழைத்துச் செல்லப்பட்ட போது பார்த்த சாட்சிகளான சவேரியார்புரம் முத்துக்கிருஷ்ணன். மீரான்குளம் யாக்கோபுராஜ் உள்ளிட்டோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. 6 மணி நேரமாக விசாரிக்கப்பட்ட இந்த விசாரணை அனைத்தும், வீடியோ பதிவு செய்யப்பட்டது.

 

விசாரணையின் போது உச்சநீதிமன்ற வழக்கறிஞரான ராமசாமி மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

 

சர்ச்சைக்குள்ளான சாத்தான்குளம் காக்கிகளை விடாது கருப்பு போல.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.