சாத்தான்குளத்தில் 8 வயதுடைய சிறுமியின் உடல், தண்ணீர் பிடிக்க பயன்படுகிற டிரம் ஒன்றில் வைக்கப்பட்ட நிலையில், பாலத்தின் அடியில் கிடக்கிறது என்று வந்த தகவலினடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எஸ்.ஐ.யான முத்துமாரி (தந்தை மகன் படுகொலையால் சாத்தான்குளத்தின் ஒட்டு மொத்தக் காவலர்களும் மாற்றப்பட்டுள்ளனர்) வடலிவிளை கிராமத்தின் பக்கமுள்ள அந்த சிறிய பாலத்திற்கு விரைகிறார். டிரம் ஒன்றில் வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 8 வயதுடைய சிறுமி உடலின் வாய் மற்றும் உதடுப் பகுதிகளில் ரத்தக்கசிவுடன் தலையில் காயமும் காணப்பட்டிருக்கிறது.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு அடித்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்கின்றனர். மேலும் அவர்களின் முதற்கட்ட விசாரணையில், அந்த சிறுமி அருகிலுள்ள கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த சேகர், உச்சிமாகாளி தம்பதியரின் மகள் என்பது தெரிய வந்திருக்கிறது. சடலமாக கிடந்த 8 வயது சிறுமி, தம்பதியரின் இரண்டு பிள்ளைகளில் இளையவர், பள்ளியில் 3ம் வகுப்பு படிப்பவராம்.
சில ஆண்டுகட்கு முன்பு கணவர் சேகர், தன் மனைவியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து சென்றுவிட, கூலி வேலையின் மூலம் தன் இரண்டு பிள்ளைகளையும் கவனித்து வந்திருக்கிறார் உச்சிமாகாளி. நேற்றைய தினம், அவர் கூலி வேலைக்கு சென்றிருக்கிறார். பள்ளிகள் மூடப்பட்டதால் பொழுது போக்கிற்காக பக்கத்து வீட்டில் டி.வி. பார்க்கும் பழக்கத்தால் நேற்று டி.வி. பார்க்கப்போன சிறுமி முத்தார் காணவில்லை, அதன்பிறகு சிறுமியின் உடல் கிடந்த தகவலே எட்டியிருக்கிறது.
போலீஸ் விசாரணையில், சிறுமியின் ஊரான கல்விளைச் சேர்ந்த இருவர் மொபட்டில் டிரம்மில் வைக்கப்பட்ட சிறுமியின் உடலைப் பாலத்தினடியில் போட்டு விட்டுச் சென்ற தகவலும் போலீசாரை எட்டியிருக்கிறது, அவர்கள் சிறுமியின் வீட்டுப் பக்கம் உள்ளவர்களாம். கஞ்சா போதை காரணமாக சிறுமி கொல்லப்பட்டாரா, கொலையான பின்பு டிரம்மில் வைத்து வீசப்பட்டாரா என்ற கோணங்களில் விசாரணையை மேற்கொண்டுள்ளனர் போலீசார். மேலும் அந்த பகுதிகளில் கஞ்சா நடமாட்டம் தற்போது அதிகமாகியிருப்பதாகவும் பேசப்படுகிறது.
சிறுமி மர்மமான முறையில் இறந்துள்ளார், மேலும் வன்கொடுமை செய்யவில்லை. கழுத்தை நெறித்து கொன்றதாக பிடிபட்ட அந்த நபர் கூறியுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த முத்து ஈஸ்வரன் உட்பட இருவர் சிக்கியுள்ளதையும் சிறுமியின் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடப்பதையும் சொல்கிறார் மாவட்ட எஸ்.பி.யான ஜெயக்குமார்.
ஆனால் சிறுமியின் தாயான உச்சிமகாளியோ, எனக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் 10 பவுன் நகை தர வேண்டும். அதற்கான பிரச்சனையும் உள்ளது, அவர் கடத்தி இப்படிச் செய்திருக்கலாம் என்கிறார். உடலைக் கைப்பற்றிய போலீசார் பாளை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பியுள்ள நிலையில், இழப்பீடு வேண்டும் என சிறுமியின் உறவினர்கள் உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.