Skip to main content

7 ஆண்டுகளுக்கு பிறகு திடீர் விசிட்! ரகசியம் உடைத்த சசிகலா!

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
Sasikala's visit to Kodanad estate creates excitement

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கோடநாடு எஸ்டேட். இப்பகுதியில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமாக தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இங்கு, சகல வசதிகளுடன் சொகுசு பங்களாவும் உள்ளது. மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருந்த போது, ஓய்வெடுக்க இந்த கோடநாடு எஸ்டேட் பங்களாவிற்கு தான் விரும்பி செல்வார். அவரின் நெருங்கிய தோழியான சசிகலாவும் உடன் செல்வார்.

இந்த நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு கோடநாடு எஸ்டேட் பங்களாவில் தொடர் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, வழக்குகளில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனகராஜ், ஆத்தூர் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அடுத்தடுத்து வழக்கில் முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டு பேசுபொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து, கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கடந்த 2017 ஆம் அண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோர் தண்டிக்கப்பட்டு சிறை சென்றனர். இதையடுத்து, 2017 ஆம் ஆண்டு நடந்த அதிமுக பொதுக்குழுவில் சசிகலா, தினகரன் ஆகியோர் தங்கள் பதவியில் இருந்தும் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். அதன் பின்னர், தண்டனைக் காலம் முடிந்து கடந்த 2021 ஆம் ஆண்டு சிறையிலிருந்து சசிகலா உள்ளிட்டோர் விடுதலையாகினர். கொரோனா பிரச்சனை மற்றும் உடல் நலக்குறைவால் கடந்த 7 ஆண்டு காலமாக சசிகலா கோடநாடு பங்களாவிற்குச் செல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 18 ஆம் தேதி 7 ஆண்டுகள் கழித்து ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் முதல் முறையாக, கோடநாடு எஸ்டேட் சென்றார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்றடைந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் கோடநாடு எஸ்டேட் சென்றடைந்தார். அவருக்கு வழி நெடுக்க தோட்ட நிர்வாகத்தினர் மற்றும் அ.ம.மு.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, சசிகலா கோடநாடு 7 ஆண்டுகள் கழித்து சென்ற ரகசியம் வெளியாகியுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்களாவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெயரில் தியான மடமும் அவரது திருவுருவச் சிலையும் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே சசிகலா சென்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், சசிகலா கோடநாட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அதில், ''கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலளர்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஆனால், அம்மா ஜெயலலிதா இல்லாத இப்படி ஒரு சூழ்நிலையில் வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை'' என கூறி கண்ணீர் சிந்தினார். தொடர்ந்து கண்ணீர் மல்க பேசிய சசிகலா, ''கொடநாடு கொலை, கொள்ளைச் சம்பவத்தில் உயிரிழந்த காவலாளி ஓம் பகதூர் சிறு வயது முதலே எஸ்டேட்டில் பணியாற்றி வந்தார். அவரின் கொலை மற்றும் எஸ்டேட் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு, நிச்சயமாக ஜெயலலிதா தெய்வமாக இருந்து தண்டனையைப் பெற்றுக் கொடுப்பார். பிளவுபட்ட அ.தி.மு.க ஒன்றுபட தொடர்ந்து முயன்று வருகிறேன். அந்த நடவடிக்கை விரைவில் வெற்றியடையும். அ.தி.மு.க‌ ஒன்றுபட ஒருவருக்கொருவர் விட்டுத் தர வேண்டும். அதுதான் அரசியலில் முக்கியமானது" என்றார்.

7 வருடங்கள் கழித்து சசிகலா கோடநாடு எஸ்டேட் சென்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதற்கு முன்பு கடைசியாக 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒன்றாக கோடநாடு எஸ்டேட் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

கொடநாடு பங்களாவில் சி.பி.சி.ஐ.டி. ஆய்வு!

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
C.b.C.I.D search in KodaNadu Bungalow

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்துள்ள கொடநாடு பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 10 பேர்  ஈடுபட்டது தெரியவந்தது. இதில் கார் ஓட்டுநர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு ஜூலை 3 ஆம் தேதி கொடநாடு பங்களாவில் சி.சி.டி.வி. ஆபரேட்டராகப் பணியாற்றி வந்த தினேஷ் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக ஏ.டி.எஸ்.பி. முருகவேல் நியமிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் என்பவர், கொடநாடு பங்களாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தடயங்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதால் நீதிமன்றத்தின் சார்பில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என ஒரு புதிய மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இதற்கு பதிலளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவில் சி.பி.சி.ஐ.டி. போலீசார், தடயவியல் துறையினர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், மின் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர் கொடநாடு பங்களாவிற்கு ஆய்வு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என சி.பி.சி.ஐ.டி. தரப்பில் மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கொடநாடு பங்களாவை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. மாதவன் தலைமையில் விசாரணை அதிகாரி ஏ.டி.எஸ்.பி. முருகவேல், புலனாய்வு அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள் மின் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் என 20 பேர் கொண்ட குழுவினர் இன்று (07.03.2024) நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது கொடநாடு பங்களாவில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவா என சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உதகை அமர்வு நீதிமன்றத்தில் நாளை (08.03.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.