Skip to main content

''எங்கள் குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்'' -கலெக்டரிடம் கோரிக்கை வைத்த சலூன் தொழிலாளர்கள்! 

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

tt

 

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பெரிய தேசத்தில், அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில் தொடர்ச்சியாக 40 நாட்கள் ஊரடங்கு நீடிப்பதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானதால் இரண்டாவது முறையாகத் தடை நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு செய்தபோது, சில தொழில்களுக்கு விலக்கு அளித்திருந்தது மத்திய – மாநில அரசுகள்.

 

அதன்படி வேளாண்மை சார்ந்த தொழில்கள், பொருட்கள் விற்பனை முதல் பல தொழில்கள், பொருட்கள் விற்பனைக்குச் சலுகை அறிவித்து கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் மதுபானக் கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டன. தமிழகத்தில் அரசே நடத்தும் டாஸ்மாக் மதுபான விற்பனை கடைகளைத் திறக்கச்சொல்லி உத்தரவிட்டு, கடைகள் திறந்த முதல்நாளே சுமார் 172 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்து தமிழகத்தை அதிரவைத்துள்ளது.


இப்படி அத்தியாவசியமற்ற கடைகள் திறக்க அனுமதி அளித்த அரசாங்கம், முடிவெட்டும் கடைகளைத் திறக்க அனுமதிக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான முடிவெட்டும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.


முடிவெட்டும் கடைகளை திறக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென கேட்டு திருவண்ணாமலை மாவட்டம் முடிவெட்டும் தொழிலாளர்கள் நலச்சங்கத்தைச் சேர்ந்த 50 பேர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்துக்கு மே 8ஆம் தேதி வருகை புரிந்தனர். அவர்கள் ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனுவைத் தந்துள்ளனர்.


அதில், கடந்த 40 நாட்களாகக் கடைகளை மூடிவைத்துள்ளோம். இதனால் எங்கள் குடும்பம் வறுமைக்குச் சென்றுள்ளது. நாங்கள் ஏழை தொழிலாளர்கள், நாங்கள் முடிவெட்டும் கடைகளை வாடகை இடத்தில் தான் வைத்துள்ளோம். கடைகளைத் திறக்கவில்லை.  ஆனால் நாங்கள் வாடகை கட்ட வேண்டியுள்ளது. இல்லையேல் கடையைக் காலி செய்யச்சொல்கிறார்கள். ஏற்கனவே வறுமையில் உள்ள எங்களால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் எங்களது நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாகக் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும். எங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

​சென்னையில் முடிவெட்டும் சவரத்தொழிலாளி ஒருவர், வறுமையால் தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடதக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சரியாக முடி வெட்டாத சலூன் கடைக்காரர்; கடையை மூட முயன்ற காவலர்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

thirunelveli police son salon shop viral incident 

 

மகனுக்கு சரியாக முடிவெட்டவில்லை என்று சலூன் கடைக்கு பூட்டுப்போட முயன்ற காவலரின் செயல் அப்பகுதியில் உள்ள மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நேவிஸ் பிரிட்டோ என்ற காவலரின் மகன் முடி வெட்டுவதற்காக  அப்பகுதியில் உள்ள சலூன் கடை ஒன்றுக்கு சென்று முடியை வெட்டிவிட்டு வீட்டுக்கு வந்து உள்ளார். சலூன் கடையில் இருந்தவர்  முடியை சரியாக வெட்டவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில்  காவலர் தனது மகன், மனைவி ஆகியோரை அழைத்துக் கொண்டு சலூன் கடைக்குச் சென்றுள்ளார். ஆனால் அப்போது சலூன் கடையில் மகனுக்கு முடி வெட்டிய கடைக்காரர் இல்லாததால் ஆத்திரமடைந்த காவலர் நேவிஸ் பிரிட்டோ கடைக்காரரை தொடர்புகொண்டு அவதூறாகப் பேசியுள்ளார். மேலும் கடையின் ஷட்டரை மூடி கடையை பூட்டு போட முயன்றுள்ளார்.

 

இந்த சம்பவத்தின் காட்சிகள் அப்பகுதியில் உள்ளவர்களின் மூலமாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக சலூன் கடைக்காரர்  காவலர் நேவிஸ் பிரிட்டோ மீது அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் வள்ளியூர் போலீஸ் டி.எஸ்.பி காவலர் நேவீஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

Next Story

முடி திருத்தகங்களில் வரிசையில் நின்ற இளைஞர்கள்!! (படங்கள்)

Published on 14/06/2021 | Edited on 14/06/2021

 

கரோனா தொற்று வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து கடந்த மே 10ஆம் தேதி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. தொடர்ந்து தொற்று அதிகரிப்பதைக் கருத்தில்கொண்டு, கடந்த மே 24ஆம் தேதிமுதல் முழுமையான ஊரடங்கு அமலுக்குவந்தது. அதன்பின்னர் கடந்த 7ஆம் தேதிமுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்குவந்தது.

 

அதேவேளை தொற்று அதிகமாக உள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு குறைவான தளர்வுகளும் மீதமிருக்கும் மாவட்டங்களுக்கு சற்று அதிகமான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன. அந்தவகையில் சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள் - சலூன்கள் திறப்பு, பூங்காக்கள் திறப்பு உள்ளிட்ட கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

மக்களின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து 27 மாவட்டங்களில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 50% பேர் அனுமதிக்கப்படுவார்கள். காலை 6.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் இந்தக் கடைகளைத் திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை. நீண்ட நாட்களுக்குப் பின்னர் கடை திறந்துள்ளதால், முடி திருத்துவதற்காக இளைஞர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.