Skip to main content

சேலம் திருமணிமுத்தாறு இன்னும் 2 ஆண்டுகளில் மீட்கப்படும்; அமைச்சர் மெய்யநாதன் தகவல்!

Published on 02/07/2022 | Edited on 02/07/2022
Salem's thirumanimuthaaru will be restored in 2 years; Minister Meiyanathan information!



கழிவுநீர் கலப்பால் மாசடைந்துள்ள சேலம் திருமணிமுத்தாறு இன்னும் இரண்டு ஆண்டுகளில் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

 

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சனிக்கிழமை (ஜூலை 2), சேலம் உத்தமசோழபுரம் அருகே, திருமணிமுத்தாற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியது:

 

''சேலம் திருமணிமுத்தாறு நிலையைப் பார்க்கும்போது மிகுந்த வேதனையைத் தருகிறது. சேலம் மாநகராட்சியின் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதாலும், சாயத் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதாலும் ஒட்டுமொத்தமாக திருமணிமுத்தாறு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

 

இந்த ஆற்றில் எந்த உயிரினமும் வாழ முடியாது. கழிவுநீர் கலந்ததால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். இதனால், நீர்வாழ் உயிரினங்களுக்கு முதல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நதி கடந்து போகும் பாதையோரம் உள்ள மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. நிலமும் பாதிக்கப்படுகிறது. இதுபற்றி எல்லாம் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

சேலம் மாநகராட்சியில் சுத்திகரிப்பு நிலையமானது 98 எம்எல்டி திறன் கொண்டது. ஆனால் தற்போது 30 சதவீதம் வரைதான் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ஆற்றில் கலப்பதாக சொல்கின்றனர். புதிதாக மூன்று சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க 530 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது. சாயக்கழிவு நீர் கலப்பதில் இருந்து தடுத்து, திருமணிமுத்தாறு முழுமையாக மீட்டெடுக்கப்படும். இதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும். அதற்கான பணிகளை இன்று முதல் தொடங்கி விட்டோம்.

 

கழிவுநீரை முழுமையாக சுத்திகரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலத்தில், 100 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அங்கு, புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ள இடத்தில் மின்சார வசதி இல்லாவிட்டால் சோலார் பிளாண்ட் அமைக்கப்படும்.

 

சேலத்தில், சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் திருமணிமுத்தாற்றில் வெளியேற்றியதாக இதுவரை 45 சாய ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விதிகளை மீறிய சாய ஆலைகள், சலவைத் தொழிற்சாலைகளிடம் இருந்து 1.50 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பது என்பது, தாய்ப்பாலில் விஷத்தை கலப்பதற்கு சமம். நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக கூடுதல் அதிகாரிகளை நியமித்து கண்காணித்து, அறிக்கை வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

 

குப்பைகளை எரிக்கக் கூடாது. பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதன் மூலம் நச்சு வாயுக்கள் வெளியேறி, புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்து உள்ளது. தமிழகத்தில் 143 குப்பைக் கிடங்குகளில் குப்பைகள் தேக்கம் அடைந்திருப்பது தெரிய வந்தது. இவற்றில் 59 கிடங்குகளில் முழுமையாக குப்பைகள் தரம் பிரித்துக் கொட்டப்பட்டு வருகின்றன. இதன்மூலம் 200 கோடி ரூபாய் சொத்துகள் உயிர் நிலங்களாக மீட்கப்பட்டுள்ளன. குப்பைகளை எந்தக் காரணம் கொண்டும் எரிக்கக் கூடாது. தரம் பிரித்துக் கொட்ட வேண்டும். ராணிப்பேட்டையில், மாவட்ட ஆட்சியர் ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 

தமிழக முதல்வர் அறிவித்துள்ள, எனது குப்பை; எனது பெருமை திட்டம் வரவேற்பு பெற்றுள்ளது. வீடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரித்துக் கொட்ட வேண்டும்'' இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

 

ஆய்வின்போது, எம்.பி., பார்த்திபன், எம்எல்ஏ ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.