Skip to main content

ஜாமினில் வந்த ரவுடியை பழிக்குப்பழியாக துரத்தி துரத்தி வெட்டிக்கொலை! கீழக்கரை கும்பல் சிக்கியது!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

salem police station incident rowdies arrest the police

 

 

சேலத்தில், காவல்நிலையம் அருகே, பழிக்குப்பழியாக ரவுடியை துரத்தி துரத்தி வெட்டிக்கொன்ற சம்பவம் தொடர்பாக கீழக்கரையைச் சேர்ந்த மூன்று ரவுடிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள மாயாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (28). கடந்த ஆகஸ்ட் மாதம் 7- ஆம் தேதி கோபிநாத், அவருடைய நண்பர் தேவகுமார் (24) மற்றும் கூட்டாளிகள் உள்ளிட்ட சிலர், அதே பகுதியைச் சேர்ந்த எடிசன் (23) என்பவரை கீழக்கரையில் வெட்டிக்கொலை செய்தனர். இதுகுறித்து ஏர்வாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கோபிநாத், தேவகுமார் ஆகியோரை கைது செய்துதனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இந்நிலையில், நவ. 5- ஆம் தேதி அவர்கள் இருவரும் நிபந்தனை ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தனர். கோபிநாத்தும், தேவகுமாரும் சேலம் சூரமங்கம் காவல்நிலையத்தில் தினமும் காலையிலும் மாலையிலும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, அவர்கள் இருவரும் சூரமங்கலம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தனர். 

 

நவ. 24- ஆம் தேதி மாலை 05.00 மணிக்கு கோபிநாத்தும், தேவகுமாரும் சூரமங்கலம் காவல்நிலையத்தில் சென்று கையெழுத்து போட்டுவிட்டு, அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் மூன்று பேர், கத்தி, வீச்சரிவாளுடன் தூக்கிக்கொண்டு அவர்கள் இருவரையும் கொல்ல ஓடிவந்தனர். இதைப்பார்த்த அவர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். 

 

இந்த துரத்தலில் கோபிநாத்தை மர்ம நபர்களிடம் வசமாக சிக்கிக் கொண்டார். அவர்கள் சரமாரியாக வெட்டியதில் கோபிநாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மக்கள் கூட்டம் கூடியதைப் பார்த்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. கண் முன்னாலேயே தன் கூட்டாளி கொல்லப்பட்டதைப் பார்த்த தேவகுமார், சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு தப்பிச்சென்று நடந்த விவரங்களைக் கூறினார். 

 

இதையடுத்து, காவல்துறை துணை ஆணையர் சந்திரசேகரன், உதவி ஆணையர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலம் கைப்பற்றப்பட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் தப்பிய கும்பலை பிடிக்க ஒட்டுமொத்த மாநகர காவல்துறையினரும் முடுக்கி விடப்பட்டனர். பள்ளப்பட்டி காவல்துறையினர், புதிய பேருந்து நிலையத்தில் கொலையாளிகள் ஏதும் பேருந்தில் ஏறி தப்பிச் செல்கிறார்களா என கண்காணித்தனர். 

 

ஒரு பேருந்தில் மூன்று பேர், உடைகளில் ரத்த கறையுடன் இருந்ததை பார்த்த காவல்துறையினர், அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த அந்தோணி, கார்த்திக், விக்னேஷ் ஆகியோர் என்பது தெரிய வந்தது. எடிசனை கொலை செய்த கோபிநாத், தேவகுமாரை பழிக்குப்பழியாக சேலத்தில் வைத்து தீர்த்துக் கட்டிவிட்டு பேருந்தில் ஏறி தப்பிச்செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். 

 

எப்போதும் மக்கள் நடமாட்டம் பரபரப்பாக இருக்கும் சூரமங்கலம் சாலையில், காவல்நிலையம் அருகிலேயே ரவுடியை துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிடிபட்ட மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.