Skip to main content

பட்டப்பகலில் பட்டறைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு; முகமூடி அணிந்த ரவுடிகள் வெறிச்செயல்!

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

salem police arrested three in Workshop case

 

சேலத்தில், பட்டப்பகலில் இரும்பு கிரில் பட்டறைக்குள் புகுந்த முகமூடி அணிந்த ரவுடிகள் மூன்று பேர், அதன் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம், செவ்வாய்பேட்டை நரசிம்மன்செட்டி சாலையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர், பள்ளப்பட்டி கோரிக்காடு பகுதியில் கிரில் பட்டறை வைத்துள்ளார். ஜன. 25ம் தேதி காலை, சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் சாரதி (19), பாஸ்கர் (45) ஆகியோர் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் மூன்று பேர் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து இருந்தனர். 


திடீரென்று பட்டறைக்குள் புகுந்த அவர்கள், அரிவாளால் சிவக்குமாரை சரமாரியாக வெட்டினர். இதைத் தடுக்க வந்த ஊழியர்களையும் வெட்டினர். இதில் நிலைகுலைந்த மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். 


அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் நிகழ்விடம் வந்து பார்த்தனர். அங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவக்குமார், சாரதி, பாஸ்கர் ஆகிய மூவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


பட்டறையில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிவக்குமார் உள்ளிட்டோரை அரிவாளால் வெட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது தெரிய வந்தது. 


கடந்த 15 ஆண்டுக்கு முன்பு, சிவக்குமாரின் வீட்டில் திருமலைகிரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் குடியிருந்து வந்தார். பின்னர் வீட்டை காலி செய்யும்படி சிவக்குமார் கூறியபோது, அந்த வீட்டை தங்களுக்கே கொடுக்குமாறு ஏழுமலை கேட்டுள்ளார். இதற்கு அப்போது ஒப்புக்கொண்ட சிவக்குமார், வீட்டை கொடுப்பதாகக்கூறி முன்பணமாக ஏழுமலையிடம் இருந்து 4.90 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி ஏழுமலை தரப்புக்கு வீட்டை விற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்ததோடு, ஏற்கனவே இது தொடர்பாக அன்னதானப்பட்டி காவல்நிலையத்திலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அந்த வழக்கில் இருதரப்பையும் அழைத்துப் பேசிய அன்னதானப்பட்டி காவல்துறையினர், சிவக்குமார் தரப்பு மேலும் 21 லட்சம் ரூபாயை ஏழுமலைக்குக் கொடுக்க வேண்டும் என்றும், இதில் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றும் சமரசம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக இருதரப்பிலும் எழுதி வாங்கப்பட்டது. இதையடுத்து சிவக்குமார் தரப்பில் முதல்கட்டமாக 5 லட்சம் ரூபாய் ஏழுமலையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 16 லட்சம் ரூபாயை நடப்பு ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் கொடுத்து விடுவதாகவும் சிவக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். 


ஆனாலும், ஏழுமலை தரப்பினர் அடிக்கடி சிவக்குமாரிடம் மீதப்பணத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதன் பின்னணியில்தான் ஏழுமலை ரவுடிகளை ஏவி விட்டு சிவக்குமாரை தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் ஏழுமலையின் மகன் பாபு என்பவர்தான் மூலையாக செயல்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பொறியியல் பட்டதாரியான அவர், தற்போது ஜார்க்கண்டு மாநிலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. 


இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிவக்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடமும் மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி, உதவி ஆணையர் நாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பள்ளப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.