Skip to main content

மனைவிக்கு பதில் கணவரை ஜாமீனில் விடுவித்த சேலம் சிறைத்துறை! ஜெய்லரிடம் விசாரணை...

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
salem

 

சேலத்தில், ஜாமீன் பெற்ற மனைவியை விட்டுவிட்டு, அவருடைய கணவரை விடுதலை செய்ததாக மத்திய சிறை ஜெய்லர் உள்ளிட்ட மூன்று பேரிடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.

 

சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் சதாசிவம் (40). ஜேசிபி மற்றும் டிராக்டர்களை சொந்தமாக வைத்து தொழில் செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் மனைவி பவித்ராவுடன் தவறான தொடர்பு இருந்து வந்தது. 

 

இதையறிந்த ரஞ்சித்குமார், கடந்த ஜூன் 22ம் தேதி இரவு, மனைவி மூலம் சதாசிவத்தை தன் வீட்டுக்கு வரவழைத்தார். கணவனும், மனைவியும் உறவினர் விஜயகுமார் என்பவருடன் சேர்ந்து சதாசிவத்தை அடித்து கொலை செய்தனர். இதுகுறித்து விசாரித்து வந்த ஏத்தாப்பூர் காவல்துறையினர், மேற்சொன்ன மூவரையும் கைது செய்தனர். 

 

இவர்களில் ரஞ்சித்குமார், விஜயகுமார் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும், பவித்ராவை சேலம் பெண்கள் கிளைச் சிறையிலும் நீதிமன்ற காவலில் அடைத்தனர். கணவன், மனைவி இருவரும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர், ஆனால் இருவரின் மனுக்களும் தள்ளுபடி ஆனது. 

 

இதைத் தொடர்ந்து பவித்ரா, ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், பவித்ராவை கடந்த புதன்மைகிழமையே (ஜூலை 22) ஜாமீனில் விடுவிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. 

 

இதற்கான உத்தரவு நகல், சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து சேலம் பெண்கள் கிளைச்சிறைக்கு நகலை அனுப்ப வேண்டும். ஆனால் ரஞ்சித்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கருதிய சிறை அலுவலர்கள், அவரை கடந்த வியாழக்கிழமை (ஜூலை 23) விடுவித்தனர். அவரும் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

 

ஜாமீன் பெற்ற பவித்ராவோ, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருடைய தரப்பு வழக்கறிஞர், பவித்ரா விடுதலை செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பிய பிறகே, மனைவிக்கு பதிலாக கணவர் ரஞ்சித்குமாரை சிறைத்துறையினர் விடுதலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, காதோடு காதாக ரஞ்சித்குமாரை உடனடியாக கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர். அதன்பிறகே ஜாமீன் பெற்ற பவித்ரா விடுவிடுக்கப்பட்டார். 

 

மனைவிக்கு பதிலாக கணவர் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், இதுகுறித்து விசாரிக்குமாறு சேலம் மத்திய சிறை எஸ்.பி. தமிழ்ச்செல்வனுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், ஜெய்லர் மதிவாணன் மற்றும் 2 சிறை அலுவலர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. 

 

முதல்கட்ட விசாரணையில், கணவன், மனைவி இருவருமே ஒரே குற்ற எண்ணில் கைது செய்யப்பட்டவர்கள். சிறைத்துறை பதிவேட்டில் பவித்ரா பெயரின் கீழ் கணவர் ரஞ்சித்குமார் எனக் கூறப்பட்டு இருந்தது. அதனால் ஏற்பட்ட கவனக்குறைவால் ரஞ்சித்குமாருக்குதான் ஜாமீன் கிடைத்திருப்பதாக கருதி, அவரை விடுதலை செய்திருப்பது தெரிய வந்தது. பணியின்போது அலட்சியமாக இருந்ததாக சிறைத்துறை வட்டாரத்தில் சிலர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.