Skip to main content

சேலத்தில் ரவுடிகள் மூவர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
SALEM

 

சேலம் அழகாபுரம் குடிநீர் வாரிய குடியிருப்பை சேர்ந்த பாத்திரக்கடை அதிபர் ஒருவர், கடந்த ஜூலை 4ம் தேதி, சொந்த வேலையாக அருகில் உள்ள சிவாய நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அவருடைய காரை மறித்தனர்.

 

பணம் பறிக்கும் நோக்கில் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்ட அவர்கள், கத்தி முனையில் பாத்திரக்கடை அதிபரிடம் இருந்த 16 ஆயிரம் ரூபாயை பறிக்க முயன்றனர். அதற்குள் அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

 

இதுகுறித்த புகாரின்பேரில், அழகாபுரம் காவல்துறையினர் விசாரித்தனர். சேலம் பெரியபுதூர் ஒடச்சக்கரையைச் சேர்ந்த கணேசன் மகன் அரவிந்த் என்கிற அரவிந்தகுமார் (22), அர்த்தநாரி கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த குமார் மகன் விஜய் என்கிற விஜயகுமார் (23), காந்தி நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் பூபாலன் (24) ஆகிய மூவரும்தான் மேற்படி பாத்திரக்கடை அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை ஜூலை 7ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கைதானவர்களில் அரவிந்தகுமார், விஜய் என்கிற விஜய்குமார் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு, ஜூன் மாதம் நடந்த ஆட்டோ கோபால் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்தது. பூபாலன் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் துணிக்கடை அதிபரை மிரட்டி பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. மேலும், ஆட்டோ கோபால் கொலை வழக்கில் பூபாலன் ஏற்கனவே ஒருமுறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு இருந்திருக்கிறார்.

 

இந்நிலையில், பிடிபட்ட மூவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி, மூவரையும் ஆக. 5ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் கைது ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.