Skip to main content

சேலத்தில் ரவுடிகள் மூவர் மீது குண்டாஸ் பாய்ந்தது!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
SALEM

 

சேலம் அழகாபுரம் குடிநீர் வாரிய குடியிருப்பை சேர்ந்த பாத்திரக்கடை அதிபர் ஒருவர், கடந்த ஜூலை 4ம் தேதி, சொந்த வேலையாக அருகில் உள்ள சிவாய நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்து அவருடைய காரை மறித்தனர்.

 

பணம் பறிக்கும் நோக்கில் வேண்டுமென்றே தகராறில் ஈடுபட்ட அவர்கள், கத்தி முனையில் பாத்திரக்கடை அதிபரிடம் இருந்த 16 ஆயிரம் ரூபாயை பறிக்க முயன்றனர். அதற்குள் அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

 

இதுகுறித்த புகாரின்பேரில், அழகாபுரம் காவல்துறையினர் விசாரித்தனர். சேலம் பெரியபுதூர் ஒடச்சக்கரையைச் சேர்ந்த கணேசன் மகன் அரவிந்த் என்கிற அரவிந்தகுமார் (22), அர்த்தநாரி கவுண்டர் காடு பகுதியைச் சேர்ந்த குமார் மகன் விஜய் என்கிற விஜயகுமார் (23), காந்தி நகரைச் சேர்ந்த பரமசிவம் மகன் பூபாலன் (24) ஆகிய மூவரும்தான் மேற்படி பாத்திரக்கடை அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்றனர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை ஜூலை 7ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

கைதானவர்களில் அரவிந்தகுமார், விஜய் என்கிற விஜய்குமார் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு, ஜூன் மாதம் நடந்த ஆட்டோ கோபால் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் என்பதும் தெரிய வந்தது. பூபாலன் மற்றும் விஜயகுமார் ஆகியோருக்கு கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் துணிக்கடை அதிபரை மிரட்டி பணத்தை கொள்ளை அடித்த வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. மேலும், ஆட்டோ கோபால் கொலை வழக்கில் பூபாலன் ஏற்கனவே ஒருமுறை குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு இருந்திருக்கிறார்.

 

இந்நிலையில், பிடிபட்ட மூவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க, சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்படி, மூவரையும் ஆக. 5ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் கைது ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.