Skip to main content

சேலத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை எப்போது? டீனின் முரண்பட்ட தகவலால் நோயாளிகள் குழப்பம்!

Published on 07/05/2021 | Edited on 07/05/2021

 

SALEM GOVERNMENT HOSPITAL REMDESIVIR SALES DEAN EXPLAIN

 

சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்துகள், வெள்ளிக்கிழமை (மே 7) முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென்று மருத்துவமனை முதல்வர் அத்தகவலை மறுத்துள்ளதால் நோயாளிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

 

தமிழகத்தில், கரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கத்தால் உயிரிழப்புகளும் கணிசமாக அதிகரித்துள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் நேற்று (06/05/2021) ஒரே நாளில் 614 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

 

நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. பொதுவெளியில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ரெம்டெசிவிர் மருந்துகள், சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (07/05/2021) முதல் விற்பனை செய்யப்படும் என்றும், கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை பாதுகாப்பு தேவை என்றும் மருத்துவமனை முதல்வர் முருகேசன் தரப்பில் மாநகரக் காவல்துறை ஆணையரிடம் கேட்கப்பட்டிருந்தது.

 

SALEM GOVERNMENT HOSPITAL REMDESIVIR SALES DEAN EXPLAIN

 

இதுகுறித்த தகவலும் சமூக ஊடகங்களில் வெளியானது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால், பலரும் சேலம் அரசு மருத்துவமனையை நோக்கி வரத் தொடங்கினர். ஆனால், அங்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்கான அறிகுறிகள் இல்லாததால் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் குழப்பம் அடைந்தனர்.

 

இது தொடர்பாக நாம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசனிடம் அலைபேசி வழியே தொடர்புகொண்டு கேட்டபோது, ''தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம்தான் (டிஎன்எம்எஸ்சி) ரெம்டிசிவிர் மருந்துகளை விற்பனை செய்கிறது. நாங்கள் அதற்கான இடத்தை மட்டுமே ஒதுக்கிக்கொடுக்கிறோம். 

 

கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை பாதுகாப்பு கேட்கப்பட்டுள்ளது. மருந்து விற்பனை எப்போது தொடங்கப்படும் என்ற தகவல் பின்னர் தெரிவிக்கப்படும். மற்றபடி, மருந்தின் விலை, மருந்து வாங்க வருவோர் என்ன சான்று கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை நீங்கள் டிஎன்எம்எஸ்சியிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அதுபற்றி தெரியாது,'' என பட்டும்படாமலும் பேசினார்.

 

முன்னதாக, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் பெயரில் இன்றுமுதல் ரெம்டிசிவர் மருந்து விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலை அடியோடு மறுத்தார். அவர் பெயரில் வெளியான அறிக்கையை அவருக்கு வாட்ஸ்ஆப்பில் அனுப்பி வைத்து விளக்கம் கேட்டபோது, மருந்து விற்பனை தொடங்கிய பிறகு தெரிவிக்கிறோம் என்று பதில் அனுப்பினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.