Skip to main content

ஆணவக்கொலை புகார்; சிறுமியின் தந்தையிடம் காவல்துறை விசாரணை

Published on 28/09/2022 | Edited on 28/09/2022

 

Salem girl child passed away police investigating with her father

 

சேலம் அருகே, காதல் விவகாரத்தில் சிறுமி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக கிளம்பிய புகார் குறித்து, சிறுமியின் தந்தையிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அருகே உள்ள பெரிய கவுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி சேமலா (36). இவர்களுடைய 17 வயதுடைய மகள், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்து வந்தாள். அதே பகுதியைச் சேர்ந்த சம்பத் (22) என்ற இளைஞரும், சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். செப். 19ம் தேதி சம்பத், சிறுமியிடம் திருமண ஆசை காட்டி, அவரை சேலத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

 

சிறுமியின் பெற்றோர் தன் மகளை கடத்திச் சென்று, பாலியல் அத்துமீறலில் நடந்து கொண்டதாக சம்பத் மீது காரிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சம்பத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்நிலையில் சிறுமிக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்து வந்துள்ளனர். ஆனால் சிறுமியோ, தான் சம்பத்தை தவிர வேறு யாரையும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன் என்று எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். 

 

இதனால் விரக்தி அடைந்த சிறுமியின் தாயார் சேமலா, செப். 25ம் தேதி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவிக்கு துணையாக மருத்துவமனையிலேயே தங்கிவிட்ட அறிவழகன் செப். 26ம் தேதி காலை வீட்டுக்கு வந்தார். அங்கு மகள் சடலமாகக் கிடந்தாள். 

 

இதற்கிடையே, சிறுமியின் காதலனான சம்பத்தின் பெற்றோரும், உறவினர்களும் சிறுமியை அவருடைய பெற்றோரே சாதி ஆணவக்கொலை செய்து விட்டதாகவும், சந்தேகம் வராமல் இருப்பதற்காக அவளுடைய தாயார் தற்கொலை நாடகம் ஆடுவதாகவும் புகார் அளித்தனர். இதற்கிடையே, சிறுமியின் சடலம் உடற்கூராய்வு செய்யப்பட்ட பிறகு, சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். உடல், தகனம் செய்யப்பட்டது. 

 

மகளை ஆணவக்கொலை செய்தனரா என்பது குறித்து காவல்துறையினர் சிறுமியின் தந்தை, உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாயார் சிகிச்சையில் இருப்பதால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவரிடமும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், உடற்கூராய்வின் அறிக்கை இன்னும் இரண்டு நாள்களில் கிடைத்துவிடும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது