Skip to main content

குரங்குகளை துன்புறுத்திய வனச்சரகர் இடமாற்றம்! புகார் சொன்னவர் மீதே வழக்கு பாய்ந்த விநோதம்; சேலம் வனத்துறை நூதன உத்தி!!

Published on 26/10/2020 | Edited on 26/10/2020

 

 

salem district yercaud monkeys forest department


சேலத்தில், குரங்குகளை துன்புறுத்தியதாக வனச்சரகர் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது புகார் அளித்த சமூக ஆர்வலர் மீதே பதிலுக்கு வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

 

சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவார பகுதியில் இருந்தே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான குரங்குகள், காட்டுப்பன்றிகள், முயல்கள், காட்டு மாடுகள் வசிக்கின்றன.

 

அடிவாரம் அருகே உள்ள தேநீர் கடைகள், பேக்கரிகள், கல்யாண மண்டபம் ஆகியவற்றுக்குள் குரங்குகள் கூட்டமாக நுழைந்து அட்டகாசம் செய்வதாக புகார்கள் கிளம்பின.

 

இதையடுத்து, சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சரவணன் தலைமையிலான வனத்துறை ஊழியர்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு, குரங்குகளை பிடிக்கும் பணிகளில் ஈடுபட்டனர். பிடிபட்ட குரங்குகளை கூண்டில் அடைத்து வாகனத்தில் ஏற்றும்போது இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

 

இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த மோகன்குமார் (44) மற்றும் பொதுமக்கள், குரங்குகளை துன்புறுத்திய வனத்துறை ஊழியர்களைக் கண்டித்து திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் கன்னங்குறிச்சி காவல்துறை வரை போகவே, அவர்கள் வந்து மக்களை சமதானப்படுத்தினர்.

 

வனத்துறை ஊழியர்கள் குரங்குகளை துன்புறுத்தியதாக மோகன்குமார், சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமியிடம் நேரில் புகார் அளித்தனர்.

 

விசாரணையில், குரங்குகளை பிடிக்கும்போது உரிய விதிகளை பின்பற்றாமல் இருந்ததும், கம்பியால் அடித்து துன்புறுத்தியதும் உறுதியானது. இதையடுத்து, சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சரவணனை நாமக்கல் சோதனைச்சாவடிக்கு இடமாற்றம் செய்து மண்டல வனப்பாதுகாவலர் உத்தரவிட்டார். சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு பொறுப்பு அதிகாரியாக அஸ்தம்பட்டி சந்தன மரக்கிடங்கு வனச்சரகர் உமாபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இதற்கிடையே, மலை அடிவாரத்திற்கு வரும் குரங்குகளுக்கு வனச்சட்ட விதிகளை மீறி உணவு வழங்கியதாக மோகன்குமார் மீது சேர்வராயன் தெற்கு வனச்சரகர் வழக்குப்பதிவு செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

தவறு செய்த ஊழியர்கள் மீது புகார் கூறினால், குற்றத்தை சுட்டிக்காட்டியவர் மீதே வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் புதிய உத்தியை சேலம் மாவட்ட வனத்துறை கையில் எடுத்துள்ளது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.