Skip to main content

முத்திரை கட்டணத்தை குறைத்து தர 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம்; துணை வட்டாட்சியர் கையும் களவுமாக சிக்கினார்!

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

SALEM DISTRICT Tehsildar MONEY VIGILANCE OFFICERS

சேலத்தில், முத்திரைத்தாள் கட்டணத்தை குறைத்துத் தர, 1.50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியரை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கோழி அமுக்குவதுபோல் அமுக்கி கைது செய்தனர். 

 

சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவருடைய மகன் நிஷாந்த் (24). இவர், சொந்தமாக ஒரு கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய நிறுவனம் சார்பில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வரகுராம்பட்டியில் 1.18 ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்தார். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்திற்கு உட்பட்ட முத்திரைக் கட்டணப்பிரிவு தனித்துணை ஆட்சியர் அலுவலகம் சேலத்தில் இயங்கி வருகிறது. 

 

திருச்செங்கோடு பகுதிக்கான தனித்துணை வட்டாட்சியராக சேலம் காந்தி சாலையைச் சேர்ந்த ஜீவானந்தம் (47) பணியாற்றி வருகிறார். இவரிடம் நிலத்திற்கான முத்திரை கட்டணத்தை குறைத்து தருமாறு நிஷாந்த் கேட்டுள்ளார். அதற்கு ஜீவானந்தம், விற்பனை செய்யப்படும் இடம் விவசாய நிலமா அல்லது என்ன வகைப்பாட்டில் உள்ளது என்பதை புலத்தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த இடம் விவசாய நிலம் என்று அறிக்கை தருவதாக இருந்தால் அதற்கு 2 லட்சம் ரூபாய் கையூட்டு கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார். 

 

இந்த தொகை அதிகமாக இருப்பதாகவும், கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படியும் நிஷாந்த் தரப்பில் பேரம் பேசப்பட்டது. கடைசியாக, 1.50 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் என ஜீவானந்தம் பேரத்தை இறுதி செய்திருக்கிறார். இந்த பணத்தை காந்தி சாலை பகுதிக்கு எடுத்துக்கொண்டு வருமாறும் கூறியுள்ளார். 


இந்த பரிவர்த்தனைக்கு ஒப்புக்கொள்வது போல பேசினாலும் நிஷாந்த் தரப்புக்கு, லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து அவர் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை ஏ.டி.எஸ்.பி. சந்திரமவுலியிடம் நேரில் புகார் அளித்தார். 

 

லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினரின் வழிகாட்டுதல்படி, ஜீவானந்தம் கேட்டிருந்த 1.50 லட்சம் ரூபாயில் ரசாயனத்தை தடவி, அவர் குறிப்பிட்டிருந்த இடத்துக்கு நிஷாந்த் வியாழக்கிழமை (டிச. 10) காலை எடுத்துச்சென்றார். அங்கு வந்த ஜீவானந்தம், அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டார். அவரை வலையில் வீழ்த்துவதற்காக அங்கு ஏற்கனவே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர், உடனடியாக பாய்ந்து சென்று ஜீவானந்தத்தை கோழி அமுக்குவது போல் அமுக்கி, கையும் களவுமாக கைது செய்தனர். அவரை லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

 

விசாரணைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு, அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர் எந்தெந்த சேவைகளுக்கு எவ்வளவு லஞ்சம் வாங்கினார்? தனித்துணை வட்டாட்சியர் ஒருவர் இவ்வளவு பெரிய தொகையை லஞ்சமாக பெறுகிறார் எனில், இதில் உயர் அதிகாரிகள் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தினர். 

 

இந்த சம்பவம், சேலம் மாவட்ட வருவாய்த்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ஊழியர் ஏமாற்றம்; லட்சக்கணக்கில் மோசடி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
18 lakh rupees scam by IT employee claiming profit from stock trading

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை நம்பிய ராமச்சந்திரன், மோசடி நபர்கள் கூறிய 8 வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story

ஆருத்ரா மோசடியில் அடுத்த பகீர்; பறக்கவிருக்கும் சம்மன்கள் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Investment in film production; Arudra fraud towards next level

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இது தொடர்பாகத் தற்போது வரை 23 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டும் அதே நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் மறுபக்கம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் மோசடி பணம் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'ஆருத்ரா பிக்சர்ஸ்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட திரைப்படத் தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணையைத் துருவி வருகின்றனர். மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கை மாற்றப்பட்ட நபர்கள் பற்றி விசாரித்து சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தவும்  தற்பொழுது முடிவெடுத்துள்ளது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை.