Skip to main content

டாஸ்மாக் பாரில் மது பாட்டிலால் குத்தி ரவுடி கொலை!

Published on 11/04/2021 | Edited on 11/04/2021

 

salem district tasmac bar incident police investigation

 

சேலத்தில், முன்விரோதத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மது பாட்டிலால் குத்தி ரவுடி கொல்லப்பட்டார். இவ்வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 40). ரவுடியான இவர், சேலம் ஆனந்தா பாலம் அருகில் உள்ள காய்கறி சந்தையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். 

 

சனிக்கிழமை (ஏப். 10) இரவு, ஆனந்தா பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் அமர்ந்து கிருபாகரன் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர்களான மேட்டுத்தெருவைச் சேர்ந்த அஹமதுஹூசேன் (வயது 30), பட்டைக்கோயில் அருகில் வசிக்கும் சீனிவாசன் (வயது 27) ஆகியோரும் அவருடன் ஒன்றாக மது அருந்தினர்.

 

அதே மதுக்கூடத்தில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த மோகன் (வயது 27), அவருடைய நண்பர்களான கோகுலகிருஷ்ணன், பூலை மோகன், சுரேஷ் ஆகியோரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் மோகன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருபாகரனின் நண்பர் ஒருவரின் மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார்.

 

இதையறிந்த கிருபாகரன், மோகனை கண்டித்ததுடன், இனிமேல் அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

 

இந்நிலையில், ஏப். 10- ஆம் தேதி மதுக்கூடத்தில் வைத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு வெடித்ததில் மோகனும், அவருடைய கூட்டாளிகளும் மது புட்டிகளை உடைத்து திடீரென்று கிருபாகரன், அஹமது ஹூசேன், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக குத்தினர். கிருபாகரனின் வயிற்றில் கத்தியாலும் குத்தியுள்ளனர். தகராறை விலக்கிவிட முயன்ற பட்டைக்கோயில் தெருவைச் சேர்ந்த அம்ஜத் (வயது 30) என்பவருக்கும் மது புட்டியால் குத்து விழுந்துள்ளது.

 

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் நகர காவல் உதவி ஆணையர் மணிகண்டன், காவல் ஆய்வாளர் சிவகுமார் (பொ) மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். அதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட மோகனும், கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

 

பலத்த காயம் அடைந்த கிருபாகரன், அஹமது ஹூசேன், சீனிவாசன், அம்ஜத் ஆகியோர் மீட்கப்பட்டு, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருபாகரன் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இச்சம்பவம் தொடர்பாக மோகனை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். பெண் விவகாரத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளதும், அதனால் ஏற்பட்ட கைகலப்பில் கொலை நடந்துள்ளதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் மோகன் கூட்டாளிகள் மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

கொலையுண்ட கிருபாகரன் மீது கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் அடிதடி தொடர்பாக 5 வழக்குகளும், ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.