Skip to main content

இரண்டு சிறைப் பறவைகளுக்கு மீண்டும் குண்டாஸ்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

salem


வழிப்பறி கொள்ளையர்கள் இருவரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் சேலத்தில் கைது செய்தனர்.

சேலம் லைன் மேடு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். கடந்த மார்ச் 19ஆம் தேதி, தாதகாப்பட்டியில் உள்ள ஒரு நகைக்கடை அருகே நடந்து சென்றபோது அவரை வழிமறித்த மர்ம நபர் ஒருவர், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த 2 பவுன் நகை, 850 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். 
 


இதுகுறித்த புகாரின்பேரில் அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். வழிப்பறி செய்த மர்ம நபர், சேலம் லைன்மேடு வேலு புதுத்தெருவைச் சேர்ந்த அன்பழகன் மகன் சம்பு என்கிற சண்முகம் (32) என்பவர்தான் எனத்தெரிய வந்து, அவரை கைது செய்து, சேலம் மத்தியச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைத்தனர்.

இவர் மீது ஏற்கனவே, பல்வேறு வழிப்பறி வழக்குகள் விசாரணையில் உள்ளதோடு, அவ்வழக்குகளில் கைதும் செய்யப்பட்டு உள்ளார். பிணையில் வெளியே சென்ற பிறகு மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
 

 


அதேபோல், அழகாபுரம் பெரிய புதூர் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பழனிவேல் மகன் அஜித்குமார் (28) என்பவரும் பலமுறை வழிப்பறி குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் இருவரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததுடன், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து, அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய, சேலம் மாநகர ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டார். 
 

http://onelink.to/nknapp


அதன்படி, சம்பு என்கிற சண்முகம், அஜித்குமார் ஆகிய இருவரும் மே 30ஆம் தேதியன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே குற்ற வழக்குகளில் கைதாகி சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் குண்டர் சட்ட கைது ஆணை நேரில் சார்வு செய்யப்பட்டது.

இவர்களில், சம்பு என்கிற சண்முகம் இரண்டாவது முறையாகவும், அஜித்குமார் மூன்றாவது முறையாகவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.