Skip to main content

அம்மா உணவகங்கள் 'அலர்ட்'; சேலத்தில் புயல் முன்னெச்சரிக்கை தீவிரம்!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

salem district nivar cyclone rains prevention peoples corporation


சேலத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்மா உணவகங்களில் தேவையான உணவுப்பொருள்களை தயார் செய்வதற்காக பணியாளர்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

'நிவர்' புயல் மற்றும் தொடர் மழை சேதங்களில் இருந்து மக்களை காப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, தமிழக அரசு மாநிலம் முழுவதும் முடுக்கி விட்டுள்ளது.

 

சேலத்தைப் பொருத்தவரை, மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களிலும் புயல் முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இப்பணிகளை ஆணையர் ரவிச்சந்திரன் நவ.25- ல் நேரில் ஆய்வு செய்தார்.

 

அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட குமரகிரி ஏரி உபரி நீர் வழித்தடம், வெள்ளைக்குட்டை ஓடை, அசோக் நகர், ஆறுமுகம் நகர், அஷ்ட லட்சுமி நகர், பச்சைப்பட்டி, தாதம்பட்டி ஆட்டோ காலனி, சிலோன் காலனி, சீலாவரி ஏரி, சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட சின்னேரி வயல்காடு ஓடை, பள்ளப்பட்டி ஓடை, புது சாலை ரயில் நகர், ரெட்டிப்பட்டி உள்ளிட்ட தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ள தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் அடைப்புகளை அகற்றும் பணிகளை பார்வையிட்டார். அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

 

நான்கு மண்டல அலுவலகங்களிலும் அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தொடர்பாக மண்டல உதவி ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆணையர் கூறுகையில், ''தாழ்வான பகுதிகளில் நீர் தடையின்றி வெளியேற ஏதுவாக, அனைத்து நீர் வெளியேற்று பாதைகளையும் விரைந்து சீர் செய்ய வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைப்பதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். 

 

தேவையான உணவுகளை தயார் செய்ய அம்மா உணவகப் பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். காற்றில் பெரிய விளம்பர பதாகைகள் கீழே சாய்ந்து பாதிப்பு ஏற்படுத்தாமல் இருக்க, அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும்,'' என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக பாலசந்தர் ஐஏஎஸ் நியமனம்!      

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Balachandar IAS appointed as the new Commissioner of Salem Corporation

 

சேலம் மாநகராட்சி புதிய ஆணையராக பாலசந்தர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  சேலம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிறிஸ்துராஜ், கடந்த மே மாதம் 16 ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, காலியாக இருந்த சேலம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை, துணை ஆணையர் அசோக்குமார் கூடுதலாகக் கவனித்து வந்தார்.     

 

இந்நிலையில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராகப் பணியாற்றி வந்த கூடுதல் ஆட்சியர் பாலசந்தர் ஐஏஎஸ், சேலம் மாநகராட்சி ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர், சேலம் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

Next Story

சாக்கடை சுத்தப்படுத்தும் பணியில் தனிநபரை ஈடுபடுத்தினால் கிரிமினல் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர்    

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

 Corporation warning criminal action will be taken individual involved sewer work
கோப்புக்காட்சி

 

சாக்கடைக் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனி நபர்களை ஈடுபடுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என சேலம்  மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.

 

சேலத்தில் சாக்கடைக் கால்வாயை ஒருவர் பாதுகாப்பு உபகரணங்களின்றி,  சுத்தம் செய்யும் காணொலி காட்சி, மாநகராட்சி நிர்வாகத்துடன் தொடர்ப்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரவியது. இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் விசாரணை நடத்தினார். காணொலி காட்சியில் உள்ள நபர் மாநகராட்சி பணியாளர் அல்லாத தனி நபர் என்பது தெரிய வந்தது. அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையின் பேரில், அந்த நபர்  சாக்கடை கால்வாயில் இறங்கி சுத்தம் செய்ததும் தெரிய வந்தது.     

 

இதையடுத்து, சேலம் மாநகராட்சியின் 60 கோட்டங்களிலும் மாநகராட்சி அனுமதியின்றி, தனிநபர்களை வைத்து சாக்கடைக் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை தவிர்க்க வேண்டும் என்று ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். கழிவுநீர்க் கால்வாய்களில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டு சுத்தம் செய்ய வேண்டியிருப்பின், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கோட்டத்தின்  சுகாதார மேற்பார்வையாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார அலுவலரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.  

 

மாநகராட்சி அனுமதியின்றி தனிநபர்களைக் கொண்டு சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபடுத்துவோர் மீது குற்றவழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாநகராட்சியில் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், தளவாடப்  பொருள்கள் போதிய அளவில் வழங்கப்பட்டு உள்ளன. தூய்மைப் பணியில் ஈடுபடும்போது பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்ய தனிநபரை அனுமதிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.