Skip to main content

சேலத்தில் 8 ஆண்டுக்குப் பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட சடலம்... கொலை வழக்கை மூடி மறைக்க போலீசார் முயற்சி!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

salem district incident govet hospital police court


சேலம் அருகே உள்ள தளவாய்ப்பட்டி சித்தனூரைச் சேர்ந்தவர் காத்தவராயன். இவருடைய மகன் மணிகண்டன் (32). கடந்த 2012- ஆம் ஆண்டு டிசம்பர் 10- ஆம் தேதி அப்பகுதியில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் இரும்பாலை காவல்துறையினர், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்தனர். 

 

வழக்கு விசாரணை நடந்த நிலையில், சித்தனூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கிராம நிர்வாக அலுவலரிடம் நேரில் ஆஜரானார். அப்போது அவர், தான் உள்பட நான்கு பேர் சேர்ந்து மணிகண்டனை தடியால் தாக்கியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். அதையடுத்து, மணிகண்டனின் சந்தேக மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்றி ஃஎப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். மேலும், கோவிந்தராஜையும் கைது செய்தனர். 

 

இடையில் என்ன நடந்ததோ, இரும்பாலை காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக சேலம் 1- ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது அதில், மணிகண்டனுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்ததால் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக பதிவு செய்திருந்தனர்.  

 

இதனால் ஏமாற்றம் அடைந்த மணிகண்டனின் தாயார் சகுந்தலா, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை முதலில் விசாரித்த டி.எஸ்.பி., 8 இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.

 

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வந்த நிலையில், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மணிகண்டனின் உடலைத் தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. வட்டாட்சியர் பிரகாஷ், சி.பி.சி.ஐ.டி. காவல்துறை டி.எஸ்.பி. கிருஷ்ணன், ஆய்வாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டப்பட்டது. 

 

சடலத்தை பிளாஸ்டிக் உறையில் வைத்து புதைத்து இருந்ததால், அழுகிய நிலையில் கிட்டத்தட்ட முழு உடலாகவே சடலம் கிடைத்தது. சேலம் அரசு மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவர் கோகுலரமணன் சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு செய்தார். சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டிய குழியில் இருந்து மணிகண்டனின் மண்டை ஓடு, எலும்புகள் கிடைத்தன. அவற்றை தடய அறிவியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

 

http://onelink.to/nknapp

 

இந்த வழக்கில் முன்பு சரணடைந்த கோவிந்தராஜ், ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். அவருடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். சந்தேக வழக்கு என்று இருந்ததை பின்னர் கொலை வழக்காக பதிவு செய்ததோடு, ஒரு குற்றவாளியையும் கைது செய்த காவல்துறையினர், பின்னர் எதற்காக மாரடைப்பில் இறந்ததாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற கேள்வியால் சேலம் காவல்துறையில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.