Skip to main content

குடிபோதையில் தகராறு: தந்தையை கடப்பாரையால் அடித்துக்கொன்ற மகன்!!!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

salem district father, son police investigation

 

சேலம் அருகே, குடிபோதையில் ஏற்பட்ட தகராறின்போது தந்தையையே மகன் கடப்பாரையால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள பெத்தாம்பட்டி பெருமாள் கோயில் காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (55). கூலித்தொழிலாளி. இவருடைய மகன் ராஜ்குமார் (35). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. 

 

ராஜ்குமார் தினமும் மது குடித்துவிட்டு போதையில் தன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவருடைய மனைவி கோபித்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

 

இதையடுத்து தந்தை, மகன் ஆகிய இருவர் மட்டும் வீட்டில் இருந்தனர். நவ. 23-ஆம் தேதி இரவு, அப்பா, மகன் இருவருமே மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர். இரவில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

 

ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், திடீரென்று வீட்டில் இருந்த கடப்பாரையால் தன் தந்தையை தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்த முருகன் அங்கேயே உயிரிழந்தார். போதையில் இருந்த ராஜ்குமார், தந்தையை கொன்றுவிட்டோம் என்ற பதற்றமே இல்லாமல் அவரும் சம்பவ இடத்திலேயே தூங்கியுள்ளார். 

 

நவ. 24- ஆம் தேதி காலை போதை தெளிந்து, தூக்கத்தில் இருந்து எழுந்த ராஜ்குமார், தந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

சேலம் ஊரக காவல்துறை டி.எஸ்.பி. உமாசங்கர், ஆட்டையாம்பட்டி காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

இந்த வழக்கில் ராஜ்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரும் தான்தான் குடிபோதையில் தந்தை என்றும் பாராமல் கடப்பாரையால் அடித்துக் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கு பயன்படுத்திய கடப்பாரையையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.