Skip to main content

பச்சிளம் பெண் குழந்தையை விற்பனை செய்த தந்தை... 5 பேர் கைது!

Published on 29/12/2020 | Edited on 29/12/2020

 

SALEM DISTRICT, CHILD INCIDENT POLICE INVESTIGATION

சேலத்தில், பிறந்து 58 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை பெற்ற தந்தையே கடத்திச்சென்று விற்பனை செய்துள்ள சம்பவத்தில் தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பெண் குழந்தையும் பத்திரமாக மீட்கப்பட்டது.

 

சேலம் நெத்திமேடு கரியபெருமாள் கரடு தெற்கு பகுதி, காந்தி நகரை சேர்ந்தவர் விஜய். டாடா ஏஸ் வாகன ஓட்டுநர். இவருடைய மனைவி சத்யா (25). இவர்களுக்கு பவிஷா (6), மேகமித்ரா (2) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சத்யா, கடந்த நவ. 1- ஆம் தேதி பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் விஜய் விரக்தி அடைந்தார். மூன்று பெண் பிள்ளைகளையும் எப்படித்தான் வளர்த்து ஆளாக்கப் போகிறோமோ என்று மனைவியிடம் அடிக்கடி புலம்பி வந்துள்ளார்.

 

இந்நிலையில், நவ. 15- ஆம் தேதியன்று, பிறந்து 15 நாள்களே ஆன தனது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு உறவினர்களிடம் காட்டிவிட்டு வருவதாக வெளியே சென்றார் விஜய். மாலையில் அவர் மட்டும் தனியாக வீடு திரும்பினார். குழந்தை இல்லாமல் கணவர் மட்டும் தனியாக வருவதைப் பார்த்து அதிர்ந்த சத்யா, குழந்தை எங்கே? என்று கேட்டார்.

 

ஒரே நேரத்தில் மூன்று பெண் குழந்தைகளையும் பராமரிக்க முடியாது என்பதால், சிறிது காலத்திற்கு உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டதாகச் சொன்னார். கணவனின் பதிலில் சத்யாவுக்கு திருப்தி இல்லை. இந்நிலையில், அவர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவர் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த நிஷா என்பவரிடம் தன் பெண் குழந்தையை கணவர் விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த சத்யா, இதுகுறித்து உடனடியாக அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்தார். 

 

முதல்கட்ட விசாரணையில் விஜய், தன்னுடைய பெண் குழந்தையை ஈரோட்டைச் சேர்ந்த சித்ரா, நிஷா ஆகியோரிடம் 1.15 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பது தெரிய வந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த பாலாமணி என்பவரிடம் குழந்தையை விற்றதும், இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு கூடுதல் விலைக்கு விற்றிருப்பதும் தெரிய வந்தது. ராஜேஸ்வரியும் அந்தக் குழந்தையை பெங்களூருவைச் சேர்ந்த கீதா என்கிற மரிய கீதா என்பவரிடம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்திருக்கும் தகவலும் கிடைத்தது. 

 

பின்னர் அந்தக் குழந்தை கீதாவிடம் இருந்தும் தர்மபுரி மாவட்டம் பொம்மிடியைச் சேர்ந்த சுந்தரராஜன் - சசிகலா என்கிற சுஜிதா தம்பதியினருக்கு 4 லட்சம் ரூபாய்க்கு கைம்மாற்றப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாததால் விஜய்யின் மூன்றாவது பெண் குழந்தையை விலைக்கு வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

 

இந்த வழக்கில் சேலம் கரியபெருமாள் கரட்டைச் சேர்ந்த வெங்கடேஷின் மனைவி கோமதி என்கிற அமுதா (34), ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியைச் சேர்ந்த நிஷா (40), ஆகிய இருவரையும் டிச.11- ஆம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இந்நிலையில், குழந்தை விற்பனை வழக்கில் தலைமறைவாக மரியகீதா (43),   ராஜேஸ்வரி (57) மற்றும் பொம்மிடியைச் சேர்ந்த சுந்தரராஜன் (40) ஆகியோரை அன்னதானப்பட்டி காவல்துறையினர் திங்களன்று (டிச. 28) கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, பிறந்து 58 நாள்களே ஆன சத்யாவின் பெண் குழந்தையை மீட்டனர். தாயிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

 

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சத்யாவின் கணவர் விஜய், சித்ரா என்கிற சித்ரபிரியா, அவருடைய கணவர் கார்த்தி ஆகியோரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

இதற்கிடையே, குழந்தையின் பிறப்பு மற்றும் உறவினர்கள் குறித்தும் அறிவியல் ரீதியிலான விசாரணை மேற்கொண்டு, குழந்தையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை?; டெல்லியில் பரபரப்பு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
4 years old girl child inciedent in delhi

டெல்லியில் டியூஷன் சென்டர் ஒன்றில் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி பாண்டவ் நகர் பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து டெல்லி கிழக்கு சரக கூடுதல் காவம் ஆணையர் சாகர் சிங் கல்சி கூறுகையில், “ 4 வயது சிறுமி ஒருவர் டியூஷன் படிக்கும் இடத்தில் 34 வயது மதிக்கத்தக்க நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக நேற்று (23.03.2024) மண்டவாலி காவல்நிலையத்திற்கு புகார் ஒன்று வந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என இந்த பகுதியில் வதந்தி பரவியதால் மக்கள் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அமைதியான சூழலை ஏற்படுத்தினர். பாதிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

மேலும் டெல்லி கிழக்கு போலீஸ் டிசிபி அபூர்வ குப்தா கூறுகையில், “சிறுமியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வதந்தி பரப்பப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல. அவளது உடல்நிலை சீராக உள்ளது. இந்த வழக்கு குறித்த அனைத்து சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை முடிந்துவிட்டது. மருத்துவ ஆலோசகரிடம் நன்றாகப் பேசுகிறார். ஒரு சிலர் உள்நோக்கத்தோடும் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.