Skip to main content

டிப்தீரியாவுக்கு தவறான சிகிச்சையால் சிறுவன் பலி; 'பிளஸ்2 டாக்டர்' அதிரடி கைது!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

SALEM DISTRICT AMMAPET CHILD INCIDENT PLUS 2 DOCTOR POLICE ARRESTED

 

 

சேலத்தில், டிப்தீரியாவால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த பிளஸ்2 மட்டுமே படித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். தவறான சிகிச்சையால் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். 

 

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். சிறுவனுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் 5 வகையான மருந்து கலந்து ஊசி போட்டுள்ளனர்.

 

ஆனாலும், காய்ச்சலின் தீவிரம் குறையவில்லை. அதையடுத்து அம்மாபேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுவனை பெற்றோர் அழைத்து சென்றனர். முதல்கட்ட சிகிச்சைக்கு பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். 

 

சிறுவனுக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்து பார்த்ததில், அவனுக்கு தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி நவ. 5- ஆம் தேதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். மாநகராட்சி நிர்வாகம், அந்த சிறுவன் வசித்த பகுதியில் நோய்த்தடுப்புப் பணிகளில் ஈடுபட்டது. 

 

இதற்கிடையே, சிறுவனுக்கு முறையான பரிசோதனை செய்யாமல், 5 மருந்து கலந்து கொடுத்து ஊசி போட்டது போலி மருத்துவர் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜனனி, அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

 

காவல்துறை விசாரணையில், அம்மாபேட்டை பெரிய கிணறு தெருவைச் சேர்ந்த ராஜா (47) என்பவர்தான் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவர் என்பதும், பிளஸ்2 வரை மட்டுமே படித்துவிட்டு அப்பகுதி மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது