Skip to main content

இந்தோனேஷிய மதபோதகர்கள் சென்று வந்த பள்ளிவாசல்களில் கிருமிநாசினி தெளிப்பு! 

Published on 28/03/2020 | Edited on 28/03/2020

சேலத்தில், இந்தோனேஷியாவைச் சேரந்த மத போதகர்கள் பரப்புரையில் ஈடுபட்ட பள்ளிவாசல்கள், மசூதிகளில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில் கிருமிநாசினி மருந்து வெள்ளிக்கிழமை (மார்ச் 27) தெளிக்கப்பட்டது. 

கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் வகையில், அதிகளவில் மக்கள் கூடும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், வழிபாட்டுத் தலங்கள், சந்தைகள், பெரிய தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் தீயணைப்பு இயந்திரங்கள் மூலமாக கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

salem coronavirus all places cleaning process collector inspection

இதையடுத்து சேலம் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அரசு மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், கரோனா நோய்த்தொற்றுள்ள நபர்கள் தங்கியிருந்த மசூதிகள், அதன் அருகில் உள்ள வீடுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 27) தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. 

சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தீயணைப்பு வாகனங்கள் மூலமும், பணியாளர்களைக் கொண்டும் பவர் ஸ்பிரேயர்கள் மூலம் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பழமையான சிஎஸ்ஐ கிறித்தவ தேவாலயம், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில், சேலம் ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

salem coronavirus all places cleaning process collector inspection

இந்தோனேஷியாவில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு, மார்ச் 11ம் தேதியன்று முஸ்லிம் மதபோதகர்கள் 11 பேர் வந்திருந்தனர். அவர்கள் சூரமங்கலம் சின்னம்மாபாளையம் நூருல் இஸ்லாம் மஜீத் ஜமாஅத் பள்ளிவாசல், செவ்வாய்ப்பேட்டை கன்னாரத்தெருவில் உள்ள பாராமார்கன் பள்ளிவாசல், கிச்சிப்பாளையம் சன்னியாசிக்குண்டு புகாரியா மசூதி ஆகியவற்றில் தங்கியிருந்து மதபோதனைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

வெளிநாட்டு முஸ்லிம் மதபோதகர்கள் சேலம் வந்து தங்கியிருப்பது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், அவர்கள் 11 பேரையும் பிடித்து மருத்துவப் பரிசோதனை செய்ததில், 5 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மதபோதனைகளில் கலந்து கொண்டவர்கள் பலரும் தங்களுக்கும் வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்நிலையில், இந்தோனேஷிய குழுவினர் மத போதனைக்காகச் சென்று வந்த பள்ளிவாசல்கள், மசூதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது. 

salem coronavirus all places cleaning process collector inspection

கரோனா வைரஸ் தொற்று என்பது ஆட்கொல்லி நோய்; இது மனித சமூகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மக்களுக்கு துண்டு அறிக்கைகள் மூலம் பரப்புரை செய்யவும், தண்டோரா, ஒலிபெருக்கிகள் மூலம் பரப்புரைகள் செய்யவும் உள்ளாட்சி மன்ற ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறுகையில், ''கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் சமூக விலகலை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். பொதுவெளியில் மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது.

அவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்கச் செல்லும்போது 3 அடி இடைவெளியைப் பின்பற்றி சமூக விலகலை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். விழித்திரு, விலகி இரு, வீட்டிலேயே இரு என்ற கோட்பாட்டினை இந்தச் சவாலான நேரத்தில் அனைவரும் தீவிரமாகப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்,'' என்றார்.

முன்னதாக கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளை ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டார். காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.