Skip to main content

விடுதியில் வாலிபர் மர்ம சாவு; ரத்த வெள்ளத்தில் சடலம் மீட்பு!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

salem 5 roads private residency youth incident police investigation

 

சேலத்தில் உள்ள தனியார் விடுதியில் திருப்பூர் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில், நிர்வாண நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருப்பூர் மாவட்டம் பெரிய நல்லூர் அருகே உள்ள நந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் (26). இவர், பிப். 21- ஆம் தேதி, சேலம் 5 சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். செவ்வாயன்று (பிப். 23) காலை சாப்பாடு வாங்கிக் கொண்டு தனது அறைக்குச் சென்றார். அதன்பிறகு அவர் வெளியே வரவில்லை. மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் அவர் தனது அறைக் கதவைத் திறக்காததால், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். 

 

காவல்துறையினர் விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அந்த அறையில், சரவணன் கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. சடலம், நிர்வாண நிலையில் கிடந்தது. சரவணனின் நெஞ்சு பகுதியில் ஆழமான காயம் இருந்தது. அடிவயிற்று பகுதியில் காயங்களும், கை நரம்புகள் வெட்டப்பட்டும் இருந்தது. இதன்மூலம் அவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்தை வலுவாக்கும் வகையில் அந்த அறையின் ஜன்னல், மர்ம நபர்கள் அதன் வழியாக எட்டிக்குதித்து தப்பி ஓடும் வகையிலும் இருந்தது. 

 

எனினும், கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததால், அவரே கத்தியால் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது. விடுதி ஊழியர்களிடம் விசாரித்தபோது, வியாபார விஷயமாக சேலம் வந்ததாக சரவணன் கூறியதாக தெரிவித்துள்ளனர். அவர் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

மேலும், சம்பவத்தன்று சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது அவருடைய அறைக்குச் சென்றார்களா என்பது குறித்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சரவணனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டும் விசாரித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் வீடு புகுந்து படுகொலை; 6 மணி நேரத்தில் பிடிபட்ட குற்றவாளி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Cruelty to a woman in broad daylight; Criminal caught in 6 hours

இந்த சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் சகோதரி மகனே கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. பணம் கேட்டுத் தராததால் ஆத்திரத்தில் இருந்த சரஸ்வதியின் சகோதரி மகன் அசோக் குமார், வீட்டில் சரஸ்வதி தனியாக இருந்த பொழுது கத்தியால் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது.

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.