Skip to main content

விடுதியில் வாலிபர் மர்ம சாவு; ரத்த வெள்ளத்தில் சடலம் மீட்பு!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

salem 5 roads private residency youth incident police investigation

 

சேலத்தில் உள்ள தனியார் விடுதியில் திருப்பூர் வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில், நிர்வாண நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திருப்பூர் மாவட்டம் பெரிய நல்லூர் அருகே உள்ள நந்தம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன் (26). இவர், பிப். 21- ஆம் தேதி, சேலம் 5 சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். செவ்வாயன்று (பிப். 23) காலை சாப்பாடு வாங்கிக் கொண்டு தனது அறைக்குச் சென்றார். அதன்பிறகு அவர் வெளியே வரவில்லை. மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் அவர் தனது அறைக் கதவைத் திறக்காததால், சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள், பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். 

 

காவல்துறையினர் விடுதி அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அந்த அறையில், சரவணன் கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது தெரிய வந்தது. சடலம், நிர்வாண நிலையில் கிடந்தது. சரவணனின் நெஞ்சு பகுதியில் ஆழமான காயம் இருந்தது. அடிவயிற்று பகுதியில் காயங்களும், கை நரம்புகள் வெட்டப்பட்டும் இருந்தது. இதன்மூலம் அவரை மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சந்தேகத்தை வலுவாக்கும் வகையில் அந்த அறையின் ஜன்னல், மர்ம நபர்கள் அதன் வழியாக எட்டிக்குதித்து தப்பி ஓடும் வகையிலும் இருந்தது. 

 

எனினும், கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததால், அவரே கத்தியால் கை நரம்புகளை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது. விடுதி ஊழியர்களிடம் விசாரித்தபோது, வியாபார விஷயமாக சேலம் வந்ததாக சரவணன் கூறியதாக தெரிவித்துள்ளனர். அவர் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

 

மேலும், சம்பவத்தன்று சந்தேகப்படும்படியான நபர்கள் யாராவது அவருடைய அறைக்குச் சென்றார்களா என்பது குறித்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். சரவணனின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டும் விசாரித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.